தனிமைப்படுத்தப்படும் அபாயத்தால் கடற்படை வீரர்களை ஒப்படைத்தோம்- இத்தாலி பிரதமர் விளக்கம்

கேரள கடல் பகுதியில் 2 மீனவர்களை சுட்டுக் கொன்ற வழக்கில் 2 இத்தாலி கடற்படை வீரர்கள் கைது செய்யப்பட்டனர். இத்தாலி தேர்தலில் ஓட்டு போடுவதற்காக 4 வார காலம் இத்தாலிக்கு சென்றுவர அவர்களுக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியது.
ஆனால் அவர்களை மீண்டும் இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப இத்தாலி அரசு மறுத்தது. பின்னர், சுப்ரீம் கோர்ட் எடுத்த அதிரடி நடவடிக்கைக்கு பணிந்து திருப்பி அனுப்பியது. இதனால் அதிருப்தி அடைந்த இத்தாலி வெளியுறவுத்துறை அமைச்சர் கியுலியோ தெர்சி பதவி விலகினார்.
இந்நிலையில், இத்தாலி வீரர்களை திருப்பி அனுப்பியது குறித்து இத்தாலி பிரதமர் மரியோ மொன்டி அந்நாட்டு பாராளுமன்றத்தில் விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, ‘இத்தாலி கடற்படை வீரர்களை திருப்பி அனுப்ப மறுத்தபோது, சர்வதேச அளவில் இத்தாலி தனிமைப்படுத்தப்படும் அபாயம் இருந்தது. இந்தியாவுடன் கடுமையான மோதல் வெடிக்கும் சூழ்நிலை நிலவியது. இந்தியாவும், 'பிரிக்ஸ்' அமைப்பின் சக உறுப்பு நாடுகளும் இத்தாலி மீது நடவடிக்கை எடுக்கதிட்டமிட்டன.
வளரும் நாடுகளில் உள்ள முக்கிய வர்த்தக கூட்டாளிகளுடனான உறவு சீரழியும் அபாயம் ஏற்பட்டது. அதனால்தான், 2 வீரர்களும் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்களை அனுப்பியதன் மூலம் இந்தியாவுக்கும், இத்தாலிக்கும் இடையிலான உறவில் முன்னேற்றம் ஏற்பட்டது. இது, பிரச்சினை விரைவாக தீர்வதற்கு வழிவகுக்கும்.
அதே சமயத்தில், பொருளாதார நலன்தான் இம்முடிவை எடுக்க முக்கிய காரணியாக இருந்தது என்பது தவறு. மேலும், இப்பிரச்சினையில் இந்தியாவுடன் எவ்வித ரகசிய பேரமும் நடக்கவில்லை.
வெளியுறவுத்துறை மந்திரி கியுலியோ தெர்சி பதவி விலகப்போவதாக முன்கூட்டியே சொல்லவில்லை. அவர் விலகியதற்கு இத்தாலி வீரர்களை திருப்பி அனுப்பியது மட்டும் காரணம் அல்ல. அவர் வேறு உள்நோக்கத்துடன் பதவி விலகி உள்ளார். அந்த காரணம் விரைவில் தெரிய வரும்' என அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications