பேச்சுவார்த்தையில் உடன்பாடு- லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்!
டெல்லி: டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் ஏப்ரல் 1-ந் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை லாரி உரிமையாளர்கள் கைவிட்டுள்ளனர்.
கனரக வாகனங்களுக்கு உயர்த்த இருக்கும் 3-ம் நபர் காப்பீட்டு பிரிமீய கட்டணத்தை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும், டீசல் விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பை எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து திரும்பப்பெற்று மாதந்தோறும் டீசல் விலை உயர்வதை கைவிட வேண்டும், நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் ஒரே சீரான சுங்க கட்டணம் வசூலிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் நாடு தழுவிய லாரிகள் வேலைநிறுத்த போராட்டத்திற்கு அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் அழைப்பு விடுத்து இருந்தது. இதனால் 75 லட்சம் சரக்கு வாகனங்கள் ஏப்ரல் 1-ந்தேதி முதல் இயக்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டது..
இதைத் தொடர்ந்து டெல்லியில் மத்திய தரைவழி போக்குவரத்து துறை அதிகாரிகள், லாரி அதிபர்களுடன் நேற்று முன் தினம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மத்திய தரைவழி போக்குவரத்து அமைச்சகச்செயலாளர் விஜய ஜிப்பர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இப்பேச்சுவார்த்தை நேற்றும் நீடித்தது. இதில் வருகிற ஏப்ரல் 1-ந்தேதி 107% உயர்த்த இருந்த 3-ம் நபர் காப்பீட்டு கட்டண தொகையின் உயர்வை குறைப்பதாக அதிகாரிகள் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.மேலும் இதர கோரிக்கைகள் குறித்து குழு அமைத்து பரிசீலித்து நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி அளிக்கப்பட்டது. இதனால் ஏப்ரல் 1-ந்தேதி முதல் நடைபெற இருந்த வேலை நிறுத்த போராட்டத்தை லாரி உரிமையாளர்கள் திரும்பப் பெற்றனர்.