55 டவுன் பஞ்சாயத்துகளில் தெரு நாய்களுக்கு கருத்தடை செய்ய உத்தரவு!
நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெருகி வரும் நாய்களை கட்டுப்படுத்த 55 டவுன் பஞ்சாயத்துகளில் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 55 டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர்களின் கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
நெல்லை மண்டல டவுன் பஞ்சாயத்து உதவி இயக்குனர் (பொறுப்பு) தர்மராஜ் தலைமை வகித்தார். செயல் அலுவலர் (நிர்வாகம்) குற்றாலிங்கம், செயல் அலுவலர் (கணக்குகள்) லெனின் மற்றும் அலுவலர்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் 55 பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகளை ஏப்ரல் 30ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை, தெரு நாய்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகி வருகிறது. எனவே தெரு நாய்களை கட்டுபடுத்த அதற்காக அனுமதிக்கப்பட்ட அமைப்பு மூலம் கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
எஞ்சியுள்ள அனைத்து டவுன் பஞ்சாயத்துகளிலும் ஏப்ரல் 15ம் தேதிக்குள் தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் எனவும், வறட்சி நிவாரண பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் எனவும், திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கான இடத்தை தேர்வு செய்யும் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications