ரூ. 32,000 கோடி ஃபைன் ஃபியூச்சர் மோசடி: முதலீட்டாளர்களிடம் மீண்டும் புகார் பெறும் போலீஸ்
கோவை: 32000 கோடி ரூபாய் மோசடி செய்த ஃபைன் ஃபியூச்சர் நிதி நிறுவன மோசடி தொடர்பாக பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார், முதலீட்டாளர்களிடம் இருந்து மீண்டும் புகார் பெறத் தொடங்கி உள்ளனர். இதனிடையே ஏஜென்டுகளாக செயல்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்துள்ளனர்.
கோவையைச் சேர்ந்த செந்தில்குமார், விவேக் ஆகியோர் பீளமேட்டை தலைமையிடமாக கொண்டு ஃபைன் ஃபியூச்சர் என்ற பெயரில் ஆன்லைன் நிதி நிறுவனம் நடத்தி வந்தனர்.
இவர்கள், ஏஜென்டுகள் மூலமாக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து பல கோடி ரூபாய் முதலீடு பெற்றனர். இந்த முதலீட்டிற்கான ஊக்கத் தொகை மற்றும் முதலீட்டுத் தொகை வழங்காமல் மோசடி செய்துவிட்டு நிறுவனத்தை மூடிவிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த முதலீட்டாளர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
இந்த வழக்கு பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாருக்கு மாற்றப்பட்ட பின், தலைமறைவாக இருந்த அதன் நிர்வாக இயக்குநர்களான செந்தில்குமார், விவேக் மற்றும் அவரது சகோதரர் நித்யானந்தன் ஆகியோரைப் போலீஸார் கைது செய்தனர். இவர்கள் மீதான வழக்கு முதலீட்டாளர்கள் நலன் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
முதலீட்டாளர் நலன் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய முதலீட்டாளர்களிடம் இருந்து மீண்டும் புகார் பெற முடிவு செய்யப்பட்டது. கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த முதலீட்டாளர்களிடம் இருந்து செவ்வாய்க்கிழமை முதல்கட்டமாக புகார்கள் பெறப்பட்டன. ஏற்கெனவே புகார் அளித்த முதலீட்டாளர்களும் மீண்டும் புகார் அளிக்க போலீஸார் வலியுறுத்தி இருந்தனர்.
இதில், முதல் நாளான செவ்வாய்க்கிழமை பலர் உரிய ஆவணங்கள் இன்றி புகார் அளிக்க வந்ததால் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சிலரிடம் மட்டுமே புகார்களைப் பெற்றனர். உரிய ஆவணம், சான்றிதழ்களை புகார் மனுவுடன் இணைத்து வழங்க போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து, அடுத்தகட்டமாக ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த முதலீட்டாளர்களிடம் புகார்கள் பெறப்படவுள்ளன.
ஆசிரியர்கள் மீது புகார்
இதனிடையே பைன் பியூச்சர் நிறுவனத்தின் ஏஜென்டாக செயல்பட்ட அரசு பள்ளி ஆசிரியர்கள் 6பேர் மீது நடவடிக்கை கோரி முதலீட்டாளர்கள் புதிதாக மனு ஒன்றை அளித்துள்ளனர். இவர்கள் 6 பேரும் உடுமலைப்பேட்டை, மதுக்குளம் பகுதிகளில் 1500க்கும் மேற்பட்டவர்களிட் சுமார் 16 ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூல் செய்தனர் என்பது குற்றச்சாட்டாகும்.