மாணவிகள் பாக்கெட்டில் கை விடுகிறார், துப்பட்டா இல்லாமல் வரச் சொல்கிறார்: ஆசிரியர் மீது புகார்
சேலம்: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுக்கும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சேலம் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
அம்பேத்கர் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர் ஆ. அண்ணாதுரை தலைமையில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 10க்கும் மேற்பட்டோர் நேற்று சென்றனர். அவர்கள் கலெக்டர் க. மகரபூஷணத்தை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது,
சேலம் பழைய சூரமங்கலம் பகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில் பணியாற்றி வரும் சமூகவியல், கணிதம் ஆகிய பாடங்கள் கற்பிக்கும் ஆசிரியர், 8ம் வகுப்பு மாணவிகளிடம் தவறாக நடந்து வருகிறார்.
உயரம் குறைந்த மாணவிகளை பின் இருக்கையிலும், உயரம் அதிகம் கொண்ட மாணவிகளை முன் இருக்கையில் அமர வைப்பதும், மாணவியின் சட்டைப் பாக்கெட்டில் கையை விட்டு என்ன வைத்திருக்கிறாய் என்று கேட்கிறார். மிக கொச்சையாக நடந்துகொள்கிறார்.
சனிக்கிழமை நாள்களில் பள்ளிக்கு கலர் சுடிதாரில் வரும் மாணவிகளிடம், துப்பட்டா இல்லாமல் வந்தால் தான் அழகாக இருக்கும் என்று கூறுவதுடன், அவர்களிடம் வரம்பு மீறி தொடும் செயல்களிலும் ஈடுபடுகிறார். இவ்வாறு, அப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்து வருகிறார். இது குறித்து உரிய விசாரணை செய்து தவறு செய்த அந்த ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.