கர்நாடகா சட்டசபை தேர்தல் பிரச்சாரம்... தோல்வி உறுதி பயத்தால் கழன்ற அத்வானி, மோடி
கர்நாடகாவின் 225 உறுப்பினர் கொண்ட சட்டசபையின் 224 தொகுதிகளுக்கு மே 5ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மற்றொரு இடம் நியமன உறுப்பினருக்கானது. தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கள் நாளை மறுநாள் தொடங்கி ஏப்ரல் 17ம் தேதி வரை நடைபெறுகிறது. மே 8ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
கர்நாடகாவைப் பொறுத்தவரையில் ஆளும் பாஜக மூன்றாக உடைந்து சிதறியிருக்கிறது. சுரங்க முறைகேட்டில் சிறைக்குப் போயிருக்கும் ஜனார்த்தன ரெட்டியின் ஆதரவாளரான முன்னாள் பாஜக அமைச்சர் பி ஸ்ரீராமுலு தனிக் கட்சி தொடங்கியிருக்கிறார். முன்னாள் முதல்வர் எதியூரப்பாவும் தம் பங்குக்கு பாஜக எம்.எல்.ஏக்களை இழுத்துக் கொண்டு தனிக் கட்சி தொடங்கியிருக்கிறார். இந்த இரண்டு கட்சிகளுக்கும் பாஜக எம்.எல்.ஏக்கள் தொடர்ந்தும் தாவி வருகின்றனர்.
மேலும் தொடர் ஊழல்கள், நில மோசடிகள், கோஷ்டி பூசல்கள், கிளுகிளு சமாச்சாரங்களால் கர்நாடகத்தில் பாஜக நிச்சயமாக தேர்தலில் தோல்வியைத் தழுவும் என்றே பல கருத்துக் கணிப்புகளும் உறுதி செய்திருக்கின்றன.
கர்நாடகா சட்டசபை தேர்தல் தொடர்பாக கடந்த டிசம்பர் மாதம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் கட்சிக்கு 113 தொகுதிகளும் பாஜகவுக்கு 58, மதச்சார்பற்ற ஜனதா தளம் -31, எதியூரப்பாவின் கர்நாடகா ஜனதா கட்சிக்கு 14 இடம் கிடைக்கும் என்று கூறப்பட்டது.
இதேபோல் ஜனவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளிலும் காங்கிரஸ்தான் வெற்றி பெறும் என்று கூறப்பட்டிருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு 110-120 இடங்களும் பாஜகவுக்கு 50-60 தொகுதிகளும்தான் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. இதனால் பாஜகவின் தோல்வி உறுதியாகி இருக்கிறது.
இந்நிலையில் பாஜகயின் தேர்தல் பிரச்சாரம் இன்று பெங்களூரில் தொடங்குகிறது. இதில் பாஜகவின் முக்கிய தலைவர்கள் பலரது பெயரும் இடம் பெற்றிருந்தாலும் மூத்த தலைவரான எல்.கே.அத்வானி மற்றும் பாஜகவின் பிரதமர் வேட்பாளரான குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ஆகியோரது பெயர்கள் இடம்பெறவில்லை.
பாஜகவின் நாடாளுமன்ற குழுவில் மோடிக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்ட நிலையில் நடைபெறக் கூடிய அக்கட்சியின் முக்கிய கூட்டம் இது. ஆனாலும் மோடி கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் மோடி 5 மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொள்வார் என்று முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டரும் மோடி 10 நாளாவது கர்நாடகாவில் பிரச்சாரம் செய்வார் என்று முன்னாள் முதல்வர் சதானந்த கவுடாவும் கூறி வருகின்றனர்.
ஆனால் எப்படியும் கர்நாடகாவில் பாஜக தோற்றுவிடும். பிரதமர் வேட்பாளராக உருவெடுத்திருக்கும் நிலையில் ஒரு தோல்விக்கு தாம் காரணம் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்துவிடக் கூடாது என்பதால் மிகவும் கவனமாக கர்நாடகா தேர்தலை மோடி தவிர்க்க விரும்புவதாகவே கூறப்படுகிறது.
இதனால் கர்நாடகா தேர்தல் பிரச்சாரத்தில் தலைகாட்ட தயங்குகிறார்.
இதேபோல்தான் எல்.கே.அத்வானியும் கருதுவதாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.