தூத்துக்குடி- கொழும்பு இடையே விரைவில் பயணிகள் கப்பல்.. துறைமுக தலைவர் தகவல்

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக்கழகத்தின் சார்பில் இன்று நடந்த வருடாந்திர செய்தியாளர்கள் சந்திப்பு நடந்தது. அப்போது நடராஜன் பேசுகையில், தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 2012-13ம் நிதியாண்டில் 286.2டன் சரக்குகளை கையாண்டு சாதனை படைத்துள்ளது. இது கடந்தாண்டை விட 0.55சதவீதம் கூடுதலாகும்.
துறைமுகத்தின் தற்போதைய கொள்ளளவான 33.34மில்லியன் டன்னை அதிகரிக்க 2012&13ம் நிதியாண்டில் பொது தனியார் கூட்டமைப்பின் கீழ் 4 திட்டங்கள் செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் 7500கோடி ரூபாயில் வெளித்துறைமுகம் அமைக்கப்பட உள்ளது. இந்த வெளித்துறைமுகத்தில் 9சரக்கு கப்பல் தளங்கள் அமைக்கப்பட்டு சரக்குகள் கையாளப்படும்.
இதற்காக ஐ மேரிடைம் கன்சல்டன்சி நிறுவனத்திடம் அறிக்கை தயாரிக்கும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனை 9மாத காலத்திற்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால் அந்த நிறுவனத்தினர் 4மாத காலத்திற்குள் இதனை முடித்து தருவதாக ஒப்புதல் அளித்துள்ளனர்.
இந்த அறிக்கையைத்தொடர்ந்து மத்திய சுற்றுச்சூழல் துறை, கப்பல் துறையிடம் அனுமதி பெறப்பட்டு வெளித்துறைமுகம் அமைப்பதற்கான பணிகள் துவங்கப்படும்.
வரும் 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் துவங்கும் வெளித்துறைமுகம் அமைக்கும் பணிகளை 2019ம் ஆண்டு இறுதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பணிகள் முடிக்கப்படும்போது தூத்துக்குடியில் 9கப்பல் தளங்களும் அமைக்கப்பட்ட பின் துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன் மேலும் 42மில்லியன் டன் அதிகரிக்கும். வெளித்துறைமுகத்தில் கப்பல்களுக்கான எரிபொருள் நிரப்புவதற்கான வசதிகளும் செய்து கொடுக்கப்படும்.
தூத்துக்குடி-கொழும்பு இடையே துவங்கப்பட்ட பயணிகள் கப்பல் போக்குவரத்து போதிய வருமானம் இல்லாத காரணத்தினால் நிறுத்தப்பட்டது. அதாவது ஆயிரம் பயணிகள் பயணிக்கும் வகையிலான தனியார் கப்பல் இயக்கப்பட்ட நிலையில் பயணிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்தது.
இந்நிலையில் தூத்துக்குடி-கொழும்பு இடையே மீண்டும் பயணிகள் கப்பல்களை இயக்குவது குறித்து கப்பல்துறையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
இதில் 150 முதல் 250 எண்ணிக்கையிலான பயணிகள் செல்லும் வகையில் சிறியரக கப்பல்களை இயக்குவது குறித்து திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டிற்குள் இதற்கான அனுமதி பெறப்பட்டு தூத்துக்குடி-கொழும்பு இடையே மீண்டும் பயணிகள் கப்பல் இயக்கப்படும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications