இங்கிலாந்து பெண் கற்பழித்து கொலை -தப்பி செல்ல முயன்ற ஆலந்து நாட்டுக்காரர் கைது
ஸ்ரீநகர்: ஸ்ரீநகர் படகு வீட்டில் தங்கி இருந்த இங்கிலாந்து பெண் கற்பழித்து கொல்லப்பட்டார். இதுதொடர்பாக, தப்பி செல்ல முயன்ற ஆலந்து நாட்டுக்காரரை போலீசார் கைது செய்தனர்.
காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரில் பிரபல தால் ஏரி உள்ளது. சுற்றுலா இடமான இங்கு தண்ணீரில் மிதக்கும் படகு வீடுகள் ஏராளமாக உண்டு. இதில் சுற்றுலா பயணிகள் தங்கி பொழுதை உல்லாசமாக கழிப்பார்கள்.
ஒரு படகு வீட்டின் ஒரு அறையில் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த 24 வயது பெண் சாரா எலிசபெத்தும் இன்னொரு அறையில் ஆலந்து நாட்டை சேர்ந்த டேவிட் ரிச்சர்ட் (43) என்பவரும் தங்கி இருந்தனர். நேற்று காலை எலிசபெத் தங்கி இருந்த அறைக்குள், அவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது கழுத்து நெரிக்கப்பட்டும் உடைகள் கிழிந்தும் காணப்பட்டது. அவர் கற்பழித்து கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.
அதே நேரம் இன்னொரு அறையில் தங்கி இருந்த ஆலந்து நாட்டுக்காரரை காணவில்லை. இது குறித்து படகுவீட்டின் உரிமையாளர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் விரைந்து செயல்பட்டு ஆலந்தை சேர்ந்த டேவிட் ரிச்சர்டை தேடும்பணியில் ஈடுபட்டனர்.
சில மணி நேரத்தில் அவர் பிடிபட்டார். ஸ்ரீநகர்-ஜம்மு தேசிய நெடுஞ்சாலை வழியாக காசிகந்த் பள்ளத்தாக்கு பகுதிக்கு தப்பிச்செல்ல முயன்ற அவரை போலீசார் கைது செய்தனர்.
தனக்குள் ஏதோ ஒன்று அவளைக் கொல்லும் படி கூறியதால், கொன்றதாக குற்றவாளி கூறியுள்ளான். இந்த தகவலை காஷ்மீர் டி.ஜி.பி.அப்துல்கனி மிர் நிருபர்களிடம் தெரிவித்தார். இங்கிலாந்து பெண் கற்பழித்து கொல்லப்பட்டாரா என்ற கேள்விக்கு, ஆரம்ப கட்ட விசாரணை நடைபெறுகிறது. அவர் கொல்லபட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது அறை கதவை உடைத்து உள்ளே புகுந்துள்ளதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. மருத்துவ பரிசோதனை அறிக்கை கிடைத்தபின் மற்ற விவரங்கள் தெரியவரும் என்றார்.