'தங்கச்சி' என்னை மன்னிச்சிடும்மா... மனைவியிடம் மன்னிப்பு கேட்ட மாஜி அமைச்சர் கணேஷ்குமார்!
கேரள காங்கிரஸ் கூட்டணி அரசில் வனத்துறை அமைச்சராக இருந்தவர் நடிகர் கணேஷ்குமார். இவரது மனைவி டாக்டர் யாமினி தங்கச்சி. இவர்கள் இருவருக்கும் திருமணமாகி 16 ஆண்டுகள் ஆகிறது. 2 குழந்தைகள் உள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணேஷ் குமாரை அவரது கள்ளக்காதலியின் கணவர் வீடு புகுந்து தாக்கியதாக செய்திகள் வெளியானது. இதனால் கணேஷ் குமாருக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இப்பிரச்சினையை தீர்க்க கணேஷ்குமாரின் மனைவி யாமினி தங்கச்சி, கேரள முதல்வர் உம்மன் சாண்டியை சந்தித்து மனு கொடுத்தார். ஆனால் உம்மன் இதுகுறித்து நடவடிக்கை எடுத்தது போலத் தெரியவில்லை. இந்த நிலையில், கணேஷ் குமார், மனைவியை விவாகரத்து செய்யகோரி திருவனந்தபுரம் குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதில் தனது மனைவி தன்னைஅடித்துக் கொடுமைப்படுத்தியதாக அவர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த யாமினி உண்மையை வெட்டவெளிச்சமாக்கினார். தனது கணவர்தான் தன்னைத் தாக்கி அடிப்பதாகவும், அறையில் அடைத்து சித்திரவதை செய்வதாகவும், தனது மகனின் வகுப்புத் தோழனின் தாயாருடன் அவருக்குக் க்ள்ளத் தொடர்பு இருப்பதாகவும், அவரது கணவர்தான் தனது கணவரை தாக்கியதாகவும் புட்டுப் புட்டு வைத்தார்.
இதனால் கணேஷ்குமாருக்குப் பெரும் சிக்கலானது. இதையடுத்து அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் கணேஷ் குமார் நேற்று மாலை திடீரென செய்தியாளர்களை அழைத்தார். அப்போது அவர் அறிக்கையை வெளியிட்டார். அதில், மனைவி மற்றும் குழந்தைகளிடம் நான் நடந்து கொண்ட விதம், இது தொடர்பாக வெளியான தகவல்களுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன். மனைவி, குழந்தைகளுடன் எனக்கு வாழ்க்கை நடத்த தெரியவில்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். அவர்களை மனரீதியாக துன்பப்படுத்தியதற்கு வருந்துகிறேன்.
நான் அமைச்சராக இருந்தபோது, வனத்துறையின் நிர்வாகத்தில் குறுக்கிட்டு என் மனைவி கோடிக்கணக்கில் பணம் முறைகேட்டில் ஈடுபட்டார் என்று கூறியது தவறு. அவரை இவ்வாறு பகிரங்கமாக காயப்படுத்தி இருக்கக் கூடாது. தெரியாமல் தவறு செய்து விட்டேன்.
என் குழந்தைகளும் மனைவியும் நல்ல வாழ்க்கை வாழ வேண்டும். அதற்காக தேவையான பண உதவிகளை செய்ய தயாராக இருக்கிறேன். இது தொடர்பாக உருவான ஒப்பந்தத்தில் கூறப்பட்ட உதவிகளை மறுக்காமல் செய்வேன். இப்பிரச்சினையை சுமூகமாக தீர்க்க காலக்கெடு அளித்த கோர்ட்டுக்கும் நன்றி தெரிவிக்கிறேன் என்று கூறியிருந்தார் கணேஷ்குமார்.