விண்ணில் பறந்த இந்தியர்கள்- ஒரு சிறப்பு கண்ணோட்டம்
சென்னை: இதுவரை இந்தியாவைச் சேர்ந்த மூன்று பேர் விண்வெளிப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
விண்வெளி ஆய்வுப் பயணம் என்பது வானவியல் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி புற விண்வெளிப் பிரதேசத்தினை ஆராய்சி செய்வதாகும். ஆண்டு தோறும் ஏப்ரல் 12 ஆம் தேதி, உலக விண்வெளி வீரர்கள் தினம் ஆக (International Day of Human Space, April 12) உலகம் முழுக்க அனுசரிக்கப்படுகிறது
உலகின் முதன்முதலாக நிலவை சுற்றிபார்த்துவிட்டு பூமி திரும்பியவர் யூரி கேகரின் (1961). விண்ணில் பறந்த முதல் இந்தியர் ராகேஷ் ஷர்மா. இதன்பின்னர் , இந்தியாவின் கல்பனா சாவ்லா, சுனிதா வில்லிம்ஸ் ஆகியோர் விண்வெளிக்கு சென்றிருந்தாலும், இவர்கள் அமெரிக்கவாழ் இந்திய வம்சாவழியினர் ஆவார். ஆனால் ராகேஷ் ஷர்மா இந்தியர் என்பது இவருக்கு கூடுதல் பெருமையைத் தருவதாக உள்ளது.
முதல் இந்தியர்...
விண்ணில் பறந்த முதல் இந்தியர் ராகேஷ் ஷர்மா. கடந்த 1984-ம் ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி ரஷ்யாவின் சோயூஸ் விண்கலம் வாயிலாக விண்ணிற்கு செல்லும் குழுவில், இந்தியாவின் ராகேஷ் ஷர்மா (63) இடம்பெற்றார்.
பாட்டியாலா ராகேஷ்...
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவைச்சேர்ந்த ராகேஷ் ஷர்மா. 1949-ம் வருடம் ஜனவரி 13-ம் தேதி பிறந்தார். தமது 21 வயதிலேயே (1970) இந்திய விமானப்படையில் சேர்ந்தார். பின்னர் படிப்படியாக பல்வேறு விமானப்படையில் பல்வேறு பொறுப்புக்களை வகித்து, மிக் ரக போர்விமானங்களை இயக்கி அதில் வெற்றியும் கண்டார்.
பாராட்டு மழை...
அன்றைய சோவியத் யூனியன் (ரஷ்யா,) பிரான்ஸ் மற்றும் வார்சா ஒப்பந்த நாடுகளுக்கு போர்விமானங்கள் குறித்த பயிற்சிக்கு சென்ற இவரின் துடிப்புமிக்க பணியினை வெளிநாட்டவர்களே பாராட்டினர்.
ராகேஷ் தேர்வானார்...
கடந்த 1982-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20-ம் தேதி ரஷ்ய விண்வெளி ஆய்வு மையம், விண்ணிற்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இறங்கியது. இதற்காக சோயூஸ் விண்கலம் தயாரானது. இதில் அந்நாட்டைச்சேர்ந்த இரு விண்வெளி வீரர்களில் மூன்றாவது வீரராக இந்தியாவின் ராகேஷ் ஷர்மாவும் தேர்வு செய்யப்பட்டார்.
பறந்தார் ராகேஷ்...
ரஷ்யாவின் கஜகஸ்தான் மாகாணத்தின் பைகானூர் விண்வெளி நிலையத்திலிருந்து சோயூஸ்-டி.11 விண்கலம் கடந்த 1982-ம் ஆண்டு ஏப்ரல் 3-ம் தேதி விண்ணில் புறப்படத்தயாரானது. மொத்தம் 7 டன் எடைகொண்ட இந்த விண்கலத்தில், விண்வெளி விஞ்ஞானிகள் கையசைத்து வழியனுப்பி வைக்க விண்ணில் பறந்தார் ஷர்மா.
முதல் இந்தியர்...
மொத்தம் 7 நாட்கள், 21 மணிநேரம், 40 நிமிடங்கள் விண்வெளியில் பயணித்தார். இதன் மூலம் விண்ணில் கால்தடம் பதித்த முதல் இந்தியர் என்ற பெருமையினை பெற்றார். விண்வெளிக்கு சென்று வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினார். ஷர்மாவுக்கு அப்போதைய பிரதமர் இந்திரா பாராட்டினார்.
விருதுகள் குவிந்தன...
ரஷ்யாவின் உயரிய விருது, இந்தியாவில் அசோக்சக்ரா விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் (ஹெச்.ஏ.எல்.), தேசிய விமான பயிற்சி மையம் (என்.எப்.டி.சி) உள்ள மையங்களில் பல்வேறு பொறுப்புக்களை வகித்த ஷர்மா கடந்த 2001-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.இவர் ஓய்வு பெற்றாலும், இந்திய விண்வெளித்துறைக்கு இவர் ஆற்றிய சேவை அளர்ப்பரியது.
கல்பனா சாவ்லா...
ராகேஷ் சர்மாவிற்கு பிறகு விண்வெளிப் பயணம் மேற்கொண்ட கல்பனா சாவ்லா இந்தியாவில் கர்னால் என்ற ஊரில் 1961-ம் ஆண்டு ஜனவரி 7-ம் நாள் பிறந்தார். ஆண்கள் மட்டுமே ஈடுபடும் விண்வெளித் துறையில் 1982 முதல் பெண் பொறியாளராய் கல்லூரியில் முதலிடம் பெற்றவர் கல்பனா. இந்தியப் பல்கலைக் கழகங்களில் விண்வெளி தொடர்பான சிறப்புத் துறைகள் இல்லாத காரணத்தால் வெளிநாட்டுக்குச் சென்றார்.
வான ஊர்தி மற்றும் விமானம் தாங்கிக் கப்பல்களுக்கு பயிற்சியாளர்...
டெக்ஸாஸ் பல்கலைக்கழகத்தில் (அமெரிக்கா) முதுகலைப் பட்டம் பெற்றார். 1988-ல் பொறியாளர் பட்டம் பெற்ற அவர் `பைலட்'டாக மட்டுமின்றி வான ஊர்தி மற்றும் விமானம் தாங்கிக் கப்பல்களுக்கு பயிற்சியாளராகவும் தகுதி பெற்றார். அமெரிக்கக் குடியுரிமை பெற்றபின் 1994-ல் நாசாவில் பலசுற்று நேர்முகத் தேர்வு மற்றும் பரிசோதனைகளுக்குப் பின் 2962 பேரில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
நாசா...
16 நாட்கள் விண்வெளிப் பயணம் கொலம்பியா விண்வெளி ஓடத்தில் மேற்கொள்ளப்பட்டது. `நாசா'வைப் பொறுத்தவரை கல்பனாவின் உடல் ஆரோக்கியம் மற்றும் கல்வித் தகுதிகள் போட்டியின்றி அவரைத் தேர்ந்தெடுக்கச் செய்தன. ஆறு விண்வெளி வீரர்களைக் கொண்ட அவ்விண் காலத்தில் இடம்பெற்ற இரு வல்லுனர்களில் கல்பனாவும் இருந்தார். அக்குழுவில் இருந்த ஒரே பெண்மணி அவர்.
வழி நடத்தினார்...
விண்கலத்தின் 50 அடி நீள எந்திரக்கையைக் கட்டுப்படுத்துவதும், பிற வீரர்களுடன் ஆறுமணிநேர விண்வெளி நடைப் பயணத்தை ஒருங்கிணைப்பதுமே அவரது பணி. நேரத்தைக் கணக்கிட்டு, கலத்தை எங்கு செலுத்த வேண்டும் என்று அவர் வழி நடத்துவார். ஒரு சமயம் இரு விண்வெளி வீரர்கள் விண்வெளி ஓடத்தை அதன் இடத்துக்கு கொண்டுவர இயலாமல் தவித்துப் போனார்கள்.
முக்கிய சோதனைகள்...
கல்பனா சென்று விண்கலத்தை உறுதியாய் பற்றியிழுத்து சரியான நிலைக்குக் கொண்டு வந்தார். இது அவருடைய ஈடுபாட்டை, மன உறுதியைக் காட்டுகிறது. அவரது குழு இருபத்தைந்து சோதனைகளுக்கு மேல் மேற்கொண்டு பவுதிக ஆய்வுகளை நிறைவு செய்தது. விண்வெளியின் எடையற்ற சூழல், மண்ணுலக செயல்பாடுகளைப் பாதிக்கும் விதம் மற்றும் சூரியனின் வெளிப்புறச் சூழல் ஆகியவையே அப்பயணத்தின் முக்கிய சோதனை அம்சங்களாய் விளங்கின.
திரும்பும் போது விபத்து...
விண்வெளித்துறையில் வெற்றி கண்ட அமெரிக்கப் பிரஜையான கல்பனா ஜீன் பியரி என்னும் அமெரிக்கரை மணந்தார். அவரும் அத்துறையிலேயே பயிற்சியாளராய் பணியாற்றியவர். 2003 பிப்ரவரி 1-ம் நாள் கல்பனா சாவ்லா உள்பட ஏழு பேர் கொலம்பியா விண்கலத்தில் 16 நாள் ஆய்வை முடித்துத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அஞ்சலி...
பூமியை வந்தடைய 15 நிமிடங்களே இருக்கும் பட்சத்தில் நான்காகப் பிளந்து வெறும் பழுப்புப் புகையாக துண்டு துண்டாக டல்லாஸ் நகரம் முழுவதும் சிதறி விழுந்தது. விலைமதிப்பற்ற ஏழு விஞ்ஞானிகளும் பலியாயினர். கல்பனாவின் மறைவுக்கு இந்தியாவே எழுந்து நின்று அஞ்சலி செலுத்தியது
சுனிதா வில்லியம்ஸ்
பிறந்தது செப்டம்பர் 19, 1965. ஒரு அமெரிக்க விண்வெளி வீராங்கனையும் கப்பல்படை அதிகாரியும் ஆவார். இவர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 14ம் விண்வெளிப் பயணத்திற்கு உறுப்பினராக்கப்பட்டார், பின் அவர் 15ம் விண்வெளி பயணத்தில் இணைந்தார். விண்வெளியில் பயணம் செய்த பெண்களில் அதிக நேரம் விண்வெளியில் பயணம் செய்த சாதனையை (195 நாட்கள்) அவர் கொண்டிருக்கிறார்.
கல்வி
இந்தியத் தந்தைக்கும், சுலொவீனியத் தாய்க்கும் பிறந்த வில்லியம்ஸ் யூக்ளிட், ஒஹைய்யோவில் பிறந்தார், மசாச்சூசெட்ஸ் இல் நீடாம் உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்று 1983 இல் தேர்ச்சி பெற்றார். அதனைத் தொடர்ந்து அமெரிக்க கப்பற்படை அகாதமியில் இருந்து அறிவியல் துறையில் இளங்கலைப் பட்டத்தை 1987 இல் பெற்றார், 1995 ஆம் ஆண்டு புளோரிடா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் இருந்து பொறியியல் நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
கப்பல்படை விமானி...
அமெரிக்க கப்பல்படையில் இளநிலை அதிகாரியாக பணி புரியும் வாய்ப்பை அமெரிக்க கப்பல்படை அகாதமியிடம் இருந்து மே 1987 இல் வில்லியம்ஸ் பெற்றார். 1989 இல் கப்பல்படை விமானியாக நியமிக்கப்பட்ட அவர், கப்பல்படையின் சோதனை பைலட் பள்ளியில் 1993 இல் பட்டம் பெற்றார்
பறந்தார்...
STS-116 உடனான சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு விண்வெளி பயணம் 14 உறுப்பினர்களுடன் இணைந்து கொள்வதற்காக டிசம்பர் 9, 2006 இல் டிஸ்கவரி விண்வெளிக் கலத்தில் வில்லியம்ஸ் அனுப்பப்பட்டார். ஏப்ரல் 2007 இல், ரஷ்ய உறுப்பினர்கள் சுழற்சி செய்யப்பட்டனர்.
சமோசாவும், பகவத் கீதையும்...
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) வில்லியம்ஸ் தன்னுடன் எடுத்துச் சென்ற சொந்த பொருட்களில், ஒரு பகவத் கீதை புத்தகம், ஒரு பிள்ளையார் படம் மற்றும் சில சமோசாக்கள் இருந்தனவாம்.
நடையில் சாதனை...
மூன்றாவது விண்வெளி நடையின் போது நிலையத்திற்கு வெளியே மொத்தம் 6 மணி நேரம் 40 நிமிடங்கள் இருந்த வில்லியம்ஸ் ஒன்பது நாட்களில் மூன்று விண்வெளி நடைகள் மேற்கொண்டார். நான்கு விண்வெளி நடைகளில் அவர் 29 மணிகள் மற்றும் 17 நிமிடங்களைப் பதிவு செய்தார், ஒரு பெண் மேற்கொண்ட அதிக விண்வெளி நடை நேரத்திற்கான காத்ரின் சி. தார்ன்டன் செய்திருந்த சாதனையை அவர் விஞ்சினார். டிசம்பர் 18, 2007 இல், விண்வெளி பயணம் 16 இன் நான்காவது விண்வெளிநடையின் போது, பெகி விட்சன் வில்லியம்சை விஞ்சினார், அதுவரையான மொத்த EVA நேரம் 32 மணி, 36 நிமிடங்கள்
சிறந்த மனிதர்...
தரையிறங்கிய பிறகு, 41 வயது சுனிதா ஏபிசி தொலைக்காட்சி நிறுவனத்தினால் "அந்த வாரத்தின் சிறந்த மனிதராக" தேர்ந்தெடுக்கப்பட்டார். நோயுடன் போராடி தங்கள் தலைமுடியை இழந்திருப்போருக்கு உதவும் வகையில் டிசம்பரில் தனது நீண்ட முடியை அவர் தியாகம் செய்ததை அந்த தொலைக்காட்சி நினைவுகூர்ந்தது.