வன்னியர் சங்கத்தின் மாமல்லபுர சித்திரை திருவிழாவுக்கு போலீஸ் அனுமதி மறுப்பு: ஐகோர்ட்டில் தகவல்
சென்னை: வன்னியர் சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் மாமல்லபுரத்தில் நடத்தப்படும் சித்திரை பவுர்ணமி திருவிழாவுக்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
சென்னையைச் சேர்ந்த வராகி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு பொது நலன் மனுதாக்கல் செய்தார். அதில், வன்னியர் சங்கம் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி அன்று மகாபலிபுரத்தில் சித்திரை திருவிழா நடத்தி வருகிறது. இந்த ஆண்டு சித்திரை திருவிழா நடத்த வன்னியர் சங்கத்துக்கு அனுமதி அளிக்க கூடாது என்று கூறியிருந்தார்.
இம் மனு தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ் குமார் அகர்வால், நீதிபதி பால்வசந்த குமார் ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காஞ்சீபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தாக்கல் செய்த மனுவில், வரும் 25-ந்தேதி மாமல்லபுரத்தில் சித்திரை திருவிழா நடத்த அனுமதி கேட்டு வன்னியர் சங்கம் விண்ணப்பம் செய்திருந்தது. தமிழ்நாட்டில் நிலவிவரும் இரு பிரிவினருக்கு இடையேயான பதற்றம் காரணமாக சித்திரை திருவிழாவுக்கு ஏன் அனுமதி மறுக்க கூடாது என்று விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியதுடன் சித்திரை திருவிழாவுக்கு போலீஸ் அனுமதியும் மறுத்துள்ளது என்று கூறியிருந்தார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் வன்னியர் சங்கத்திடம் இருந்து போலீசார் விளக்கம் பெற்று சித்திரை திருவிழா நடத்த அனுமதி வழங்குவது குறித்து வருகிற 19-ந்தேதிக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
வன்னியர் சங்கத்தின் ஆண்டுதோறும் சித்திரை திருவிழாவை பாட்டாளி மக்கள் கட்சிதான் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு இதே சித்திரை திருவிழாவின் போது வன்னியர் சங்கத்தின் தலைவராக இருக்கும் காடுவெட்டி குரு, சாதிவெறியைத் தூண்டும் வகையில் பேசியதாக பெரும் சர்ச்சை வெடித்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications