தமிழகத்துக்கு வினாடிக்கு 40 கன அடி சிறுவாணி அணை நீரை வழங்க கேரளா ஒப்புதல்
திருவனந்தபுரம்: சிறுவாணி அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 40 கனஅடி தண்ணீர் திறந்து விட கேரள அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதனால் கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்படுவது தடுக்கப்பட்டுள்ளது.
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் கே.வி. ராமலிங்கமும், கேரள மாநில நீர்வளத்துறை அமைச்சர் பி.ஜே.ஜோசப்பும் நேற்று திருவனந்தபுரத்தில் சந்தித்து பரம்பிகுளம்-ஆழியார் நதி நீர் பங்கீடு ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
கூட்டம் முடிந்ததும் அமைச்சர் பி.ஜே. ஜோசப் செய்தியாளர்களிடம் கூறியதாவது
பரம்பிகுளம்-ஆழியார் நதி நீர் ஒப்பந்தப்படி கேரளாவுக்கு உடனடியாக வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் வழங்க வேண்டும் என்று கேரள முதல்வர் உம்மன்சாண்டி, தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதி இருந்தார். அதன்படி, ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள மணக்கடவு அணைக்கு வினாடிக்கு 100 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட தமிழகம் சார்பில் ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. அதற்கு பதிலாக சிறுவாணி அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 40 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விட கேரளா ஒப்புக்கொண்டு உள்ளது. இதன் மூலம் பாலக்காடு மாவட்டத்தின் குடிநீர் பிரச்சினைக்கு சுமுக தீர்வு கிடைக்கும்.
சிறுவாணி அணையில் தற்போது நீர் மட்டம் குறைந்து உள்ளதால், தமிழகத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள 40 கன அடி தண்ணீரை, ராட்சத மோட்டார்களை பயன்படுத்தி பம்ப் செய்தால் மட்டுமே தமிழகம் அதனை பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
குமரிக்கு தண்ணீர் கிடைக்காது
ஆனால் வறட்சி காரணமாக வறண்டு கிடக்கும் நெய்யார் அணையில் இருந்து குமரி மாவட்டத்திற்கு, இப்போது தண்ணீர் வழங்க இயலாது என்று கேரள அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்தக்கூட்டத்தில் தமிழக அரசின் சார்பில் செயற்பொறியாளர், பரம்பிகுளம்-ஆழியார் திட்ட தமிழ்நாடு தலைமை பொறியாளர் ஆகியோர் பங்கேற்றனர். இதேபோல் கேரள அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.