குஜராத் போலி என்கவுண்டர்: நீதிமன்ற காவலில் இருந்த ஐபிஎஸ் அதிகாரி வீட்டில் தங்கியது அம்பலம்
அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் சொரபுதீன் போலி என்கவுண்டர் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஐ.பி.எஸ். அதிகாரி ராஜ்குமார் பாண்டியன், ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டில் தங்கியதை தனியார் தொலைக்காட்சி அம்பலப்படுத்தி உள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த பாண்டியன், குஜராத் கேடரைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியாவார். சொரபுதீன் போலி என்கவுன்ட்டர் வழக்கில் இவர் 2007ம் ஆண்டு கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை குஜராத் மாநிலத்துக்கு வெளியே விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பாண்டியன் மும்பை சிறைக்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில், துளசிராம் பிரஜாபதி போலி என்கவுண்டர் வழக்கு தொடர்பாக விசாரணைக்காக ஞாயிற்றுக்கிழமை மாலை பாண்டியனை ரயில் மூலம் அகமதாபாத்துக்கு அழைத்து வந்தனர்.
கைதியான அவர் அரசு இல்லத்தில் தான் இரவு தங்க வேண்டும். ஆனால், அவர் அகமதாபாத் பிரஹலாத் நகரில் உள்ள தனது வீட்டில் தங்கி உள்ளார். பாண்டியன், கார் மூலம் வீட்டுக்குச் சென்றதை தனியார் தொலைக்காட்சி படம் பிடித்து வெளியிட்டுள்ளது.
திங்கள்கிழமை காலை வீட்டிலிருந்து புறப்பட்ட அவரை செய்தியாளர்கள் முற்றுகையிட்டனர். அங்கிருந்து தப்பிய அவர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.