இந்தியாவுக்குள் 5வது கூடாரத்தை அமைத்த சீனா.. மோப்ப நாய்ப் படையையும் களத்தில் இறக்கியது!
மேலும் இந்தப் பகுதியை கண்காணிக்க சீன ராணுவம் தனது மோப்ப நாய்ப் படையையும் பயன்படுத்த ஆரம்பித்துள்ளது.
லடாக்கின் தெளல் பேக் ஓல்டி பகுதியில் இந்திய எல்லைக்குள் 18 கி.மீ. வரை நுழைந்து சீனா இந்த அத்துமீறலை கடந்த 2 வாரமாக மேற்கொண்டுள்ளது.
5 கூடாரங்களை அமைத்துக் கொண்டுவிட்ட சீனா புதிதாக ஒரு பேனரையும் நேற்று அங்கு கட்டிவிட்டுள்ளது. அதில், "you are in Chinese side" என்று கொட்டை எழுத்தில் எழுதப்பட்டுள்ளது.
இந்த இடத்தை 24 மணி நேரமும் சீன ராணுவ வீரர்கள் கண்காணித்துக் கொண்டுள்ள நிலையில், மிக உயரமான மலைப் பகுதிகளில் கண்காணிப்புக்கு உதவும் மோலோசர் வகை (molosser dogs) மோப்ப நாய்களையும் கண்காணிப்புப் பணியில் சீனா ஈடுபடுத்தியுள்ளது.
இந்த இடத்தில் ஊடுருவியுள்ள ராணுவ வீரர்களுக்கு ஏ.கே. 47 துப்பாக்கிகளும் பிற ஏ.கே. வகை துப்பாக்கிகளும் தரப்பட்டுள்ளன. இவர்களை மேற்பார்வையிட்டு வரும் அதிகாரிகள் வசம் சீனத் தயாரிப்பான மகரோவ் வகை துப்பாக்கிகள் உள்ளன.
இந்த விவகாரத்தில் இந்திய- சீன ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் 3 முறை பேச்சு நடத்தியும் பலன் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்து.