நாடாளுமன்றத்தில் இன்றைக்கு அமைதியாக இருக்கிறோம்… சபாநாயகரிடம் எதிர்கட்சிகள் உறுதி
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதி கடந்த 22-ஆம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் முதல் திங்கட்கிழமை வரை ஒரே அமளிதான். நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு விவகாரம், 2ஜி அலைக்கற்றை தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை, இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் ஊடுருவியது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எழுப்பி, நாடாளுமன்றத்தின் இருஅவைகளையும் முடக்கி வருகின்றனர்.
இதையடுத்து, நண்பகலில் மக்களவையில் உள்ள பல்வேறு கட்சிகளின் அவைத் தலைவர்கள் கூட்டத்தை மக்களவைத் தலைவர் மீரா குமார் கூட்டினார். இந்தக் கூட்டத்தில் நிதி மசோதா, ரயில்வே பட்ஜெட் திருத்த மசோதா உள்ளிட்டவை நிறைவேற்ற ஒத்துழைப்பு அளித்தால்தான் மற்ற விஷயங்கள் குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்க முடியும்' என்று மக்களவைத் தலைவர் மீரா குமார் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து, "நிதி மசோதா தொடர்புடைய அலுவல்களை மட்டும் செவ்வாய்க்கிழமை நிறைவேற்ற ஒத்துழைப்பு வழங்குகிறோம்' என்று கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஒருமனதாக முடிவு செய்தனர்.
எதிர்கட்சிகளின் இந்த முடிவினால் நாடாளுமன்றம் இன்றைய தினம் அமைதியாக நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.