பேரறிவாளன், முருகன் சாந்தன் தண்டணையை குறைக்க பிரதமரிடம் திமுக எம்.பி.க்கள் மனு

நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர். பாலு தலைமையில் அக்கட்சி எம்.பி.க்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை நேற்று சந்தித்து அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
மரண தண்டனை நாகரிக சமுதாயத்தின் உயர்ந்த பண்புகளை பிரதிபலிப்பதாக இல்லை. எனவே, மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்று திமுகவும் அதன் தலைவர் கருணாநிதியும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இம்மாதம் முதல் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஒன்றில், மகேந்திரநாத் தாஸ் மரண தண்டனை குறித்த கருணை மனு 11 ஆண்டுகளுக்குப் பின் ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டி மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டது, முருகன், சாந்தன் மற்றும் பேரரறிவாளன் வழக்குகளையும், மகேந்திர நாத் தாஸ் வழக்கு அடிப்படையில் பரிசீலிக்க வேண்டும்.
1998ம் ஆண்டு இந்த மூவரின் மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. 1991ம் ஆண்டு கைது செய்யப்பட்டதில் இருந்து. 22 ஆண்டுகள் இந்த மூவரும் சிறையில் வாடி வருகின்றனர். இந்த சிறைவாசம், மரண தண்டனையைவிட கொடுமையானது.
மகேந்திரநாத் தாஸ் மரண தண்டனை வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, முருகன், சாந்தன் மற்றும் பேரறிவாளன் ஆகியோரது மரண தண்டனை, மனிதாபிமான அடிப்படையில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட வேண்டும். இதற்காக மத்திய அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஜனாதிபதிக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவைப் பெற்றுக் கொண்ட பிரதமர் மன்மோகன் சிங், ‘‘உங்கள் உணர்வுகளை புரிந்து கொண்டேன். இந்த பிரச்னையில் ஆழ்ந்த பரிசீலனைக்குப் பிறகு அரசு உரிய முடிவு எடுக்கும்'' என்று தங்களிடம் தெரிவித்ததாக டி.ஆர். பாலு கூறினார்.












Click it and Unblock the Notifications