எம்.எல்.ஏ. அலுவலகம் தீ வைப்பு எதிரொலி: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வீடுகளுக்கு போலீஸ் பாதுகாப்பு
நெல்லை: ஆத்தியூர் எம்.எல்.ஏ. ரமணிதரனின் அலுவலகத்திற்கு தீ வைக்கப்பட்டதையடுத்து அனைத்து அதிமுக எம்.எல்.ஏ.க்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் ஆத்தியூர் எம்.எல்.ஏ. ரமணிதரன் அலுவலகம் அண்ணாமடுவு பகுதியில் உள்ளது. நேற்று முன்தினம் அவரது அலுவலகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் தீ வைத்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி பாமகவைச் சேர்ந்த 9 பேரை கைது செய்தனர்.
இந்த சம்பவம் எதிரொலியாக தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்களின் வீடுகள், சட்டமன்ற அலுவலம் மற்றும் வாரிய தலைவர்கள் வீடுகளுக்கு நேற்று முன்தினம் இரவு முதல் போலீஸ் பாதுகாப்பு போட உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி தமிழகம் முழுவதும் உள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வீட்டிற்கு ஒரு எஸ்.ஐ. தலைமையில் இரண்டு போலீசாரும், அலுவலகத்திற்கு இரண்டு போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் எஸ்.பி. விஜயேந்திர பிதாரி உத்தரவின்பேரில் நெல்லை, அம்பை, சங்கரன்கோவில், வாசுதேவநல்லூர், ஆலங்குளம் ஆகிய தொகுதிகளில் உள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் வீடுகளில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கல்லிடைக்குறிச்சி அருகேயுள்ள வீட்டு வசதி வாரிய தலைவர் முருகையா பாண்டியன் வீட்டிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்.பி. ராஜேந்திரன் உத்தரவின் பேரில் அமைச்சர் செல்லப்பாண்டியன் வீடு, அலுவலகம், கோவில்பட்டி, கடம்பூர், விளாத்திகுளம் ஆகிய தொகுதிகளில் உள்ள எம்.எல்.ஏ.க்களின் அலுவலகங்கள், வீடுகளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.