கேரளாவில் விபத்தில் பலியான தாயின் இதய வால்வுகளை தானமாக கொடுத்த சிறுவன்
திருவனந்தபுரம்: கேரளாவில் விபத்தில் பலியான தனது தாயின் இதய வால்வுகளை 11 வயது சிறுவன் தானமாக வழங்கியுள்ளான்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வசித்து வந்தவர் ராதிகா. கேரள அரசு ஊழியர். அவரது கணவர் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் ராதிகா தனது 11 வயது மகன் விஷ்ணுவுடன் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது மகனுடன் இரண்டு சக்கர வாகனத்தில் சென்றார். அப்போது எதிரே வந்த ஆட்டோ இரு சக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் ராதிகா சம்பவ இடத்திலேயே பலியானார். விஷ்ணு காயங்களுடன் உயிர் தப்பினான்.
தனக்கென்று இருந்த ஒரே உறவையும் இழந்து சிறுவன் அனாதையானான். தனது தாயின் உடல் உறுப்புகளை தானம் செய்ய சிறுவன் முடிவு செய்தான். இந்நிலையில் சித்திரைத் திருநாள் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள 2 நோயாளிகளுக்கு இதய வால்வு தேவைப்பட்டது. அதனால் மருத்துவர்கள் அச்சிறுவனை தொடர்பு கொண்டனர். இதையடுத்து சிறுவன் தனது தாயின் இதய வால்வுகளை தானமாக கொடுத்தான்.
தற்போது உறவினர்களின் பராமரிப்பில் இருக்கும் விஷ்ணுவின் தாராள மனதை பலரும் பாராட்டியுள்ளனர்.












Click it and Unblock the Notifications