தமிழ் வழி கல்வி: ஜெயலலிதா காந்தியையும், பாரதியையும் பின்பற்ற வேண்டும்- குமரி அனந்தன்
சென்னை: பள்ளிக் குழந்தைகளுக்கு தமிழ் மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்று காந்தி பேரவை தலைவர் குமரி அனந்தன் முதல்வர் ஜெயலலிதாவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். தமிழக முதல்வர் காந்தியையும், பாரதியையும் பின்பற்றி தமிழகத்தை அறிவில் ஓங்கிய மாநிலமாக ஆக்கித்தர வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவரும், காந்தி பேரவை தலைவருமான குமரி அனந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சமீபத்தில் தமிழக அரசு பிஞ்சுக் குழந்தைகளுக்கு ஆங்கில வழி கல்வியை கொடுப்போம் என்று அறிவித்துள்ளது. இது தமிழகத்தை மிகவும் பின் தங்க செய்துவிடும். பெற்றோரின் மரபு அணுக்களால் குழந்தை பிறக்கிறது. எனவே பெற்றோர் மொழியே குழந்தைகளுக்கு இயல்பாகவும், எளிதாகவும் வரும்.
தாய் மொழியால் விரைவாக அறிவை வளர்த்துக் கொள்ள முடியும். சுயமான சிந்தனை கைகூடும். தாய் மொழி தமிழாக இருக்கும் போதே கல்வியை இன்னொரு மொழியின் மூலம் பெறும் போது தன் தாய் மொழி ஆகிய தமிழையே குழந்தைகள் தாழ்வாக நினைக்கத் தோன்றும். தாய் மொழியின் பெருமையை நிலைநாட்டவே அரசும், அறிஞர்களும் பாடுபட வேண்டும்.
பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்த போது நேருவிடம் வாதாடி அகில இந்திய தேர்வுகளை தமிழில் எழுத வழி வகுத்தார். தாய் மொழியில் கருத்துக்களை குறைவான எழுத்துக்களிலேயே கூறிவிட முடியும்.
அறிவியலில் அதிகமான புதுமைகளை கண்டுபிடிக்கும் ரஷ்யாவும், ஜெர்மனியும், ஜப்பானும் அவரவர் தாய் மொழிகளிலேயே சொல்லி கொடுக்கிறார்கள். அண்ணல் காந்தி மகான் தமிழே போதனா மொழியாக இருக்க வேண்டும் என்றார். தமிழை இனிய தெய்வீக மொழி என்றார்.
ஸ்ரீரங்கம் நகரசபை அவருக்கு வரவேற்பை பனை ஓலையில் பொறித்து கொடுத்த போது மிகவும் மகிழ்ந்த காந்தியடிகள் வரவேற்பை ஏன் ஆங்கிலத்தில் பொறித்து கொடுத்து இருக்கிறீர்கள். உங்கள் அழகிய தமிழில் தந்து இருக்கலாம் அல்லவா என்றார்.
அதே போல மாகாகவி பாரதியார் அ முதல் ன் வரை சகல சாஸ்திரங்களையும் தமிழிலேயே சொல்லிக் கொடுக்க வேண்டும் என்றார். தமிழக முதல்வர் காந்தியையும் - பாரதியையும் பின்பற்றி தமிழகத்தை அறிவில் ஓங்கிய மாநிலமாக ஆக்கித்தர வேண்டும் என்று பணிவோடு வேண்டுகிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications