சேலம் ரயில் நிலையத்தில் பெண் டாக்டர் தற்கொலை
சேலம்: சேலம் ரயில் நிலையத்தில் பெண் டாக்டர் ஒருவர் விஷ ஊசி போட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையப் பிரிந்த வருத்தத்தி்ல இந்த முடிவை அவர்தேடியதாக கூறப்படுகிறது.
சேலம் ஜங்சன் ரயில்நிலையம் 4வது பிளாட்பாரத்தில் நேற்று முன்தினம் இரவு இளம்பெண் ஒருவர் மயங்கி கிடந்தார். ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், எஸ்.ஐ., செல்வராஜ் ஆகியோர் அப்பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அப்பெண் இறந்தார்.
விசாரணையில், அப்பெண் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த ஜனனி (29) என்பது தெரியவந்தது. டாக்டரான அவர் சேலம் அருகேயுள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்.டி., படித்து வந்தார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் முத்துக்குமார் என்பவருடன் திருமணம் நடந்தது. கணவர் சென்னையில் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
நிகிலா ரம்யா (3) என்ற பெண் குழந்தை உள்ளது.விசாரணையில் ஜனனி விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. சேலம் மருத்துவமனையில் உடல் பரிசோதனை செய்யப் பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
எம்பிபிஎஸ் முடித்த ஜனனி, எம்.டி படிப்புக்காக சேலத்தில் தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். இதற்காக அவரது குழந்தையை பிரிந்து சேலத்தில் அறை எடுத்து தங்கினார். ஆனால் குழந்தையின் பிரிவை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. இதனால் அவரால் சரியாக படிக்க முடியவில்லை. இதன் காரணமாக அவர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
இருப்பினும் வேறு காரணம் இருக்குமா, குடும்பப் பிரச்சினை ஏதேனும் இருந்ததா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.