கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்க புதிய சட்டம்: சட்ட அமைச்சர் கபில் சிபல்

ஐபிஎல் போட்டிகளில் சூதாட்டத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் மற்றும் அஜீத் சாண்டிலா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சென்னையில் 6 தரகர்கள் உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கிரிக்கெட் உள்ளிட்ட அனைத்து விளையாட்டுகளிலும் சூதாட்டத்தை தடுக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று மத்திய சட்ட அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விளையாட்டுத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங்குடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இந்நிலையில் ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். நேற்று முன்னாள் ரஞ்சி வீரர் மனிஷ் குட்டேவர் கைது செய்யப்பட்டார். அவர் 2003ம் ஆண்டில் இருந்து 2005ம் ஆண்டு வரை விதர்பா சார்பில் ரஞ்சி கோப்பை போட்டிகளில் விளையாடினார். அவருக்கு அஜீத் சாண்டிலாவை 2000ம் ஆண்டில் இருந்தே தெரியும். அவர் சாண்டிலாவுடன் கிரிக்கெட் விளையாடியுள்ளார்.
மனிஷ் தான் சாண்டிலா தரகர்களுடன் தொடர்பில் இருக்க உதவியுள்ளார். மனிஷ் ஔரங்காபாத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். அவருடன் சுனில் பாட்டியா(44), கிரண் டோலே(43) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இது தவிர ரயில்வேக்காக விளையாடும் வீரர் ஒருவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சாண்டிலாவுக்கு 4 தரகர்களுடன் தொடர்பிருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஸ்ரீசாந்த், சவான் மற்றும் சாண்டிலாவை முதன் முதலாக ஒன்றாக வைத்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அப்போது 3 பேரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால் 3 பேருமே தங்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்டுள்ள 3 வீரர்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவர்கள் 3 பேருக்கும் எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் போலீசில் புகார் கொடுக்கவிருக்கிறது. ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பாக போலீசார் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகத்திடமும் விசாரணை நடத்துவார்கள் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications