ஜெ ஆட்சியில் குடிநீருக்காக மக்கள் படும் அவலங்கள்! - கருணாநிதி அறிக்கை

திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கை:
"தமிழகத்தில் காலிக் குடங்களுடன் மக்கள் அலைகின்ற புகைப்படங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தபோதிலும், அரசுத் தரப்பில் எந்தவித நடவடிக்கையும் இல்லை. சென்னைக்கு முழுமையாக குடிநீர் கிடைக்க வாய்ப்பு 15 நாள்தான், குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் மளமளவென சரிவு என்ற தலைப்பில் இன்றைக்கு கூட நாளிதழ்களில் செய்தி வந்திருக்கிறது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 230 கோடி கனஅடி தண்ணீர் மட்டுமே இருக்கிறது. சோழவரம் ஏரியில் சிறிது கூட தண்ணீர் இல்லை. கடந்த ஒரு வாரமாக குடிநீர் விநியோகம் முறையாக இல்லாததால் மக்கள் காலிக் குடங்களுடன் தண்ணீருக்கு அலைந்து வருகின்றனர் போன்ற செய்திகள் நாளேடுகளில் வருகின்றன.
சில இடங்களில் கழிவுநீர் கலந்து துர்நாற்றத்துடன் கூடிய தண்ணீர்தான் விநியோகிக்கப்படுவதாக மக்கள் புகார் கூறியுள்ளனர். சென்னை எம்.ஜி.ஆர். நகரைச் சேர்ந்த பெண், இதுவரை பணத்தை மட்டுமே கடனாக கேட்டு வந்தோம்.
தற்போது குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் பக்கத்து வீடுகளில் குடிநீரை கடன் கேட்கும் நிலைக்கு ஆளாகிவிட்டோம் என்று கூறியுள்ளார். குடிநீருக்காக இன்று குடும்பத்தோடு அலைய வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது என சென்னை மக்கள் பலர் வேதனையுடன் கூறுகின்றனர்.
அதிமுக ஆட்சியில் குடிநீருக்காக மக்கள் ஆலாய்ப் பறக்கின்ற கொடுமைகளுக்கு இவை எல்லாம் ஆதாரங்கள்.
ஓகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்காக திமுக மேற்கொண்ட பணிகள் குறித்து ஒரு சில நாளேடுகள் எழுதியுள்ளன. தற்போது திட்டப்பணிகள் இன்னும் முழுமையடையாமல் உள்ள நிலையில் தொடக்க விழா நடைபெறுவது பற்றி நாளேடுகள் கேள்வி எழுப்பியுள்ளன," என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications