பாலியல் தொழிலாளியின் பிள்ளைகளிடம் ’அப்பா யார்’ என கேட்க மகாராஷ்டிரா அரசு தடை!
நாக்பூர்: பாலியல் தொழில் புரியும் பெண்களின் குழந்தைகளை பள்ளி, கல்லூரிகளில் சேர்க்கும்போது, கண்டிப்பாக அப்பா பெயர் கேட்கக்கூடாது என கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது மஹாராஷ்ட்ரா அரசு.
பொதுவாக பள்ளி, கல்லூரிகளில் பிள்ளைகளைச் சேர்க்கும் போது தாய், தந்தை பெயரைக் குறிப்பிடுவது அவசியம் என்ற நடைமுறையே பின்பற்றப்பட்டு வருகிறது. இதனால், பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்களின் பிள்ளைகள் மற்றும் திருநங்கைகளால் தத்தெடுத்து வளர்க்கப் படும் வளர்ப்பு பிள்ளைகளின் பாடு கேள்விக்குறியாகி விடுகிறது.
இதன் காரணமாக அவர்கள் தங்கள் பிள்ளைகளை கல்வி பயில அனுப்ப தயங்கி வந்தனர். இவர்களின் துயரினை களையும் வகையில், கல்வி நிறுவனங்களுக்கு மராட்டிய அரசு கடந்த வாரம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதில், ' பள்ளி, கல்லூரி மற்றும் கல்வி நிலையங்களில் விபசார பெண்கள், திருநங்கைகள் உள்ளிட்டவர்கள் கல்வி அறிவு பெறுவதற்காக தங்களது குழந்தைகளை சேர்க்கும்போது தந்தையின் பெயர் மற்றும் வசிப்பிட சான்றிதழ் உள்ளிட்டவற்றை கேட்கக்கூடாது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 'கல்வி அறிவு பெரும் சட்டத்தின்' கீழ் கட்டாயம் தனியார் கல்வி நிறுவனங்கள் விபசார பெண்கள் மற்றும் திருநங்கைகளின் குழந்தைகளுக்கு தங்கள் பள்ளி, கல்லூரிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு கட்டாயம் வழங்கவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசின் இந்த உத்தரவால் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ள பாலியல் தொழில் புரியும் பெண்கள் மற்றும் திருநங்கைகள், அரசுக்கு தங்களது நன்ரியினை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications