ஜீன்ஸ் அணிய… செல்போன் பயன்படுத்த இளம் பெண்களுக்கு தடை போடனும்! பா.ஜ. எம்.பி பேச்சால் சர்ச்சை
இந்தூர்: பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவது குறையவேண்டுமானால் திருமணத்திற்கு முன்பாக அவர்கள் மொபைல்போன், ஜீன்ஸ் பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று மத்தியபிரதேச பாஜக துணைத் தலைவரும் ராஜ்யசபா எம்.பியுமான ரகுநந்தன் சர்மா கூறியுள்ளார். இந்த கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தின் ரட்லம் மாவட்டத்தில் பாஜக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்றுப் பேசிய ரகுநந்தன் கூறியதாவது:
இளம்பெண்கள் ஜீன்ஸ் அணிவது அமெரிக்க கவ்பாய் தோற்றத்தை ஏற்படுத்துகிறது, இது இந்திய கலாச்சாரத்திற்கு எதிரானது, ஏற்புடையதல்ல.
அதேபோல் மாணவிகள், இளம்பெண்கள் திருமணத்திற்கு முன்னதாக மொபைல் போன் பயன்படுத்துவதாலேயே பெரும்பாலான அச்சுறுத்தல்களும், குற்றங்களும் நடைபெறுகிறது என்று கூறிய அவர், தனது இந்த கருத்தை தனி மனித நோக்கில் இருந்தே தெரிவிப்பதாகவும், பா.ஜ.,வின் கொள்கையின் அடிப்படையில் தெரிவிக்கவில்லை எனவும் கூறினார்.
மன்னிப்பு கேட்க வலியுறுத்தல்
ரகுநந்தனின் இந்த கருத்திற்காக அவரும், பா.ஜ.,வும் பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவான் பெண்களுக்கான பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார்; ஆனால் கட்சியின் மூத்த தலைவர்களான விஜய் ஷா, பாபுலால் கவுர், கைலாஷ் விஜய்வர்கியா, ரகுநந்தன் சர்மா உள்ளிட்டோர் பெண்களுக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்; ரகுநந்தனின் பெண்களுக்கு எதிரான இந்த கருத்திற்கு அவர் மட்டுமல்ல பா.ஜ.,வும் பொது மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நரேந்திர சிங் சலுஜா தெரிவித்துள்ளார்.
பெண்கள் அமைப்பினர் எதிர்ப்பு
பா.ஜ., எம்.பி., ரகுநந்தனின் இந்த கருத்திற்கு தேசிய மகளிர் ஆணையம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய தேசிய மகளிர் ஆணைய தலைவி மம்தா சர்மா, பெண்கள் இன்னும் பழங்காலத்தை போன்றே இருக்க வேண்டும் என இந்த அரசியல்வாதி விரும்புவதாகவும், இவரது இந்த கருத்து அனைத்து பெண்கள் மத்தியிலும் வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.