ஹய்யா... 'வாக்காளர்' பட்டியலில் சஸ்பெண்ட் ஆன 6 தேமுதிக எம்.எல்.ஏக்களுக்கும் இடம்!
சென்னை: சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள 6 தேமுதிக எம்.எல்.ஏக்களின் பெயர்களும், ராஜ்யசபா தேர்தலில் வாக்களிக்க உரிமை பெற்ற எம்எல்ஏக்களின் வரிசையில் இடம் பெற்றுள்ளது. அவர்கள் வாக்களிக்க தகுதி உண்டு என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள எம்.எல்.ஏ.க்களின் பட்டியலை, சட்டசபை செயலகம் வெளியிட்டுள்ளது. அந்தப் பட்டியலில், எம்.எல்.ஏ.க்களின் தொகுதி பெயர், எம்.எல்.ஏ. பெயர், அவருடைய முகவரி மற்றும் அவர் சார்ந்துள்ள கட்சி ஆகிய விவரங்கள் இடம்பெற்றுள்ளன.

சட்டசபையிலிருந்து தேமுதிகவைச் சேர்ந்த வி.சி.சந்திரகுமார், கே.நல்லதம்பி, அனகை முருகேசன், எஸ்.செந்தில்குமார், பி.பார்த்தசாரதி, ஆர்.அருள்செல்வன் ஆகியோர் கடந்த மார்ச் மாதம் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அவர்கள் ஆறு மாதங்களுக்கு எம்.எல்.ஏ.வாகப் பணியாற்ற முடியாது என சபாநாயகர் தனபாலும் உத்தரவிட்டுள்ளார்.
இதனால் இவர்கள் ராஜ்யசபா தேர்தலி்ல வாக்களிக்க முடியாது என்று ஒரு தரப்பும், வாக்களிக்க உரிமை உண்டு என தேமுதிக தரப்பும் கூறி வருகிறது.
இந்த நிலையில் வாக்களிக்கத் தகுதி பெற்ற எம்.எல்.ஏக்கள் பட்டியலை தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுடன் சட்டசபை செயலகம் வெளியிட்டுள்ளது. அதில், இந்தஆறு பேரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.
இதன் மூலம் இவர்கள் ராஜ்யசபா தேர்தலில் வாக்களிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதை தேர்தல் ஆணைய அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர்.
தங்களுக்கு வாக்களிக்க அனுமதி கோரி இந்த ஆறு பேரும் ஏற்கனவே வழக்கும் தொடர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications