வெள்ளத்தில் சிக்கிய தமிழர்களை விமானம் மூலம் அழைத்து வர ஏற்பாடு… ஜெயலலிதா அறிவிப்பு
சென்னை: உத்தரகண்ட் மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் தமிழக யாத்திரிகர்கள் அனைவரும் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வரப்படுவார்கள் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
ருத்ர பிரயாக் மற்றும் சமோலி மாவட்டங்களில் உள்ள கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய ஊர்களுக்கு யாத்திரை சென்ற தமிழக யாத்ரீகர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்பது குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

கூட்டத்திற்குப் பின்னர் முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
உத்தரகண்ட் மாநிலத்தில் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக தமிழகத்தைச் சேர்ந்த யாத்திரிகர்கள் சிக்கித் தவிக்கின்றனர் என்ற செய்தி அறிந்தவுடன், சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் ஒரு தகவல் மையத்தை திறக்குமாறு ஏற்கெனவே உத்தரவிட்டு இருந்தேன். எனது உத்தரவின் பேரில், நேற்று முதல் இந்தத் தகவல் மையம் செயல்பட்டு வருகிறது.
இந்தச் சூழ்நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில், உத்தரகண்ட் மாநிலத்தில், சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 37 பேர், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேர், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 19 பேர், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 37 பேர், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த 41 பேர், கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 13 பேர், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 பேர், மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த 62 பேர், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 64 பேர், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 105 பேர் என மொத்தம் தமிழ்நாட்டைச் சேர்ந்த 399 யாத்திரிகர்கள் தமிழகம் திரும்ப முடியாமல் சிக்கித் தவிப்பது தெரிய வந்தது.
தமிழகம் திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கும் யாத்திரிகர்களை உடனடியாக தமிழகத்திற்கு கொண்டு வரும் வகையில், டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு சிறப்புப் பிரதிநிதியின் தலைமையில், டெல்லி தமிழ்நாடு இல்லத் தலைமை ஆணையர், தமிழ்நாடு வருவாய்த் துறை செயலாளர் மற்றும் மாநில நிவாரணம் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் ஆகியோர் அடங்கிய ஓர் உயர்மட்டக் குழு உத்தரகண்ட் மாநில தலைமையகமான டேராடூனுக்கு உடனடியாக செல்ல உத்தரவிட்டுள்ளேன்.
இந்த உயர்மட்டக் குழு, உத்தரகாண்ட் மாநில அரசு மற்றும் மத்திய அரசுடன் இணைந்து செயல்பட்டு, தமிழகம் திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கும் தமிழகத்தைச் சேர்ந்த யாத்திரிகர்களை உடனடியாக அரசு செலவில் ஹெலிகாப்டர் மூலம் டேராடூன் அழைத்து வரவும், அங்கிருந்து அவர்களை டெல்லிக்கு அழைத்து வந்து, பின் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வரவும் உத்தரவிட்டுள்ளேன்.
இது மட்டுமல்லாமல் யாத்திரிகர்களின் உறவினர்கள் சிக்கித் தவிக்கும் பயணிகள் குறித்த தகவல் அறிந்து கொள்ள டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் ஓர் உதவி மையத்தினை அமைத்திட உத்தரவிட்டுள்ளேன். இந்த உதவி மையத்தில் 011-24193455, 011-24193456 ஆகிய தொலைபேசி எண்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதே போன்று, சென்னையில் உள்ள நிவாரண ஆணையர் அலுவலகத்தில் கட்டணமில்லா தொலைபேசி எண் 1070 ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனையும் யாத்திரிகர்களின் உறவினர்கள் தொடர்பு கொள்ளலாம்.
உத்தரகண்ட் மாநிலத்தில் சிக்கித் தவிக்கும் யாத்திரிகர்கள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்பதையும், அவர்களை தமிழகம் கொண்டு வருவதற்கான அனைத்து உதவிகளையும் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளும் என்பதையும், இது குறித்து யாத்திரிகர்களின் உறவினர்கள் எவ்வித கவலையும் கொள்ளத் தேவையில்லை இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications