அம்மா உணவகம் சக்ஸஸ் எதிரொலி: காய்கறி கடை, மினரல் வாட்டர், அடுத்து கிரானைட் ஏற்றுமதி செய்கிறது அரசு
சென்னை மாநகராட்சியில் 200 இடங்களில் மலிவு விலை உணவகங்கள் திறக்கப்பட்டன. இதற்கு கிடைத்த வரவேற்பினை அடுத்து 10 மாநகராட்சிகளிலும் அம்மா உணவகம் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்று வருகிறது.
இதையடுத்து மலிவு விலை காய்கறிக்கடைகளை சென்னையில் 31 இடங்களில் முதல்வர் திறந்து வைத்தார். இதேபோல் குடிநீர் பிரச்சினை தீர 10 ரூபாய்க்கு அம்மா மினரல் வாட்டர் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மதுரை மாவட்டம், மேலூரில் நிறுவப்பட்டுள்ள கிரானைட் கற்பலகை மெருகூட்டும் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் கிரானைட் கற்பலகைகள் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
மதுரை மாவட்டம், மேலூரில் நிறுவப்பட்டுள்ள கிரானைட் கற்பலகை மெருகூட்டும் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் கிரானைட் கற்பலகைகள் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலூரில் கிரானைட் தொழிற்சாலை
முதல்வர் ஜெயலலிதா இன்று (20.6.2013) தலைமைச் செயலகத்தில், மதுரை மாவட்டம், மேலூரில் தமிழ்நாடு கனிம நிறுவனத்தால், 34 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள கிரானைட் கற்பலகை மெருகூட்டும் தொழிற்சாலையை வீடியோ காண்பரன்சிங் மூலமாக திறந்து வைத்தார்.
தமிழ்நாடு கனிம நிறுவனம்
தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் சார்பில் மதுரை மாவட்டம், மேலூர் அருகில் கருத்தம்புளியம்பட்டி கிராமத்தில் ஆண்டுக்கு சுமார் 1,80,000 சதுர மீட்டர் அளவுள்ள 2 செ.மீ. மற்றும் 3 செ.மீ. கனமுடைய கற்பலகைகளை மெருகூட்டி பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய வகையில் உலக தரத்திலான மெருகூட்டப்பட்ட கிரானைட் கற்பலகைகள் தயாரிக்கும் தொழிற்சாலை 34 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ளது.
சுற்றுச் சூழல் பாதுகாப்பு
இந்த தொழிற்சாலையில் சுற்றுச்சூழல் மாசுபடுத்தாத நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கற்பலகைகளை மெருகூட்டும் இயந்திரங்கள் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இத்தாலி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு நிறுவப்பட்டுள்ளன. இந்த தொழிற்சாலைக்குத் தேவையான கிரானைட் கற்கள் தமிழ்நாடு கனிம நிறுவனத்திற்குச் சொந்தமான கீழவளவு, கீழையூர், திருத்தங்கல், தெற்கு கல்லிடைக்குறிச்சி, நாகனூர், தோகமலை போன்ற குவாரிகளிலிருந்து பெறப்படும்.
ஆண்டுக்கு ரூ.40 கோடி அந்நியச் செலாவணி
இங்கு தயாரிக்கப்படும் மெருகூட்டப்பட்ட கிரானைட் கற்பலகைகளின் விற்பனை மதிப்பு ஆண்டிற்கு சுமார் 40 கோடி ரூபாயாகும். இத்தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் கிரானைட் கற்பலகைகள் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இதன்மூலம் நாட்டிற்கு கணிசமான அந்நியச் செலாவணி ஈட்டப்படும்.
பலருக்கு வேலை வாய்ப்பு
இந்த தொழிற்சாலை மூலம் சுமார் 100 பேருக்கு நேரடியாகவும், 200 பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு ஏற்படும். இத்தொழிற்சாலை ஆண்டுக்கு சுமார் 4 கோடி ரூபாய் அளவிற்கு லாபம் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
டாஸ்மாக் மூடப்படுமா?
அரசின் வருமானத்திற்காக டாஸ்மாக் கடைகள் நடத்தப்படுவதாக கூறப்பட்டது. இப்போது அதைவிட வருமானம் தரும் கிரானைட் ஏற்றுமதியை அரசு கையில் எடுத்துள்ளதால் டாஸ்மாக் கடைகளுக்கு அரசு மூடுவிழா நடத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.