ராஜ்யசபா தேர்தலில் இ.கம்யூனிஸ்டுக்கு ஜெ. விட்டுக் கொடுக்க காரணம் இதுதானோ!

ராஜ்யசபா தேர்தலில் ஒரு எம்.பி. வெற்றி பெற 34 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. சட்டசபையில் அதிமுகவுக்கு 151 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அதிருப்தி தேமுதிகவைச் சேர்ந்த 7 எம்.எல்.ஏக்களும் அதிமுகவுக்கு ஆதரவாக உள்ளனர். 5 வேட்பாளர்களை வெற்றிபெற வைக்க மொத்தம் 170 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. ஆனால் அதிமுக, தேமுதிக அதிருப்தியாளர்கள் என மொத்தமாக 158 எம்.எல்.ஏக்கள் ஆதரவுதான் உறுதி என்ற நிலை இருந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கட்சியும் என்ன நிலைப்பாடு எடுக்கும் என்றும் தெரியவில்லை. இதனால் 5வது வேட்பாளர் வெல்ல முடியாத நிலை வந்துவிடுமோ என்ற நிலையில் அதிமுக இருந்தது.
அப்போதுதான் இந்திய கம்யூனிஸ்ட் எப்படியும் அதிமுகவிடம் சீட் வாங்கிவிடுவது என்ற போராட்டம் நடத்தியது. இதனால் தமது 5வது வேட்பாளரை வாபஸ் வாங்கிவிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் டி.ராஜாவை ஆதரிப்போம் என்று அறிவித்திருக்கிறார் ஜெயலலிதா. தோற்றுவிடுவோம் என தெரிந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் வலிய வந்ததால் ‘வெற்றி!வெற்றி!' என்ற முழக்கம் மட்டுமே இப்போது அதிமுக முகாம்களில்!!
விஜயகாந்த்தை ஏமாற்றிய காங்கிரஸ்
இதேபோல் தமிழகத்தில் மிகப் பெரிய கட்சியாக தம்மை நினைத்துக் கொள்ளும் விஜயகாந்துக்கும் காங்கிரஸ் போக்குக் காட்டி வந்தது. காங்கிரஸ்- தேமுதிக இரண்டு மட்டும் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என்று திட்டமிட்டார் விஜயகாந்த். அவரது இந்த போக்கை எளிதாக பயன்படுத்திய காங்கிரஸ் தம்மை நெருங்கி வர வைத்தது. காங்கிரஸ் எப்படியும் தம்மையே ஆதரிக்கும் என நினைத்த விஜயகாந்த் திமுகவை எதிர்த்து களம் இறங்கினார். ஆனால் காங்கிரஸோ தேமுதிகவை காட்டியே திமுகவை தம் பக்கம் வளைத்துப் போட்டது. திமுகவைப் பொறுத்தவரையில் அனைத்து கட்சிகளிடமும் ஆதரவு கேட்டதைப் போலவே காங்கிரஸிடமும் ஆதரவு கேட்டு வைத்திருந்தது. தேமுதிகவா, திமுகவா என்ற காங்கிரஸின் கணக்கில் திமுகதான் சரியெனப்பட்டுவிட பச்சைக் கொடி காட்டி ஆதரவு தெரிவித்துவிட்டது. இதைத்தான் இப்போது திமுக தலைவர்களும் விளக்கம் அளித்து வருகின்றனர். பாவம் விஜயகாந்த்!












Click it and Unblock the Notifications