சித்தப்பாவை கொன்று தலையை லாரி, டாக்சியில் எடுத்து வந்து போலீசில் சரணடைந்த வாலிபர்
கோலார்: சித்தப்பாவின் தலையை வெட்டி ஒரு பெட்டிக்குள் போட்டு அதை பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரம் சிறைக்கு கொண்டு வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் அன்னென்னஹல்லியைச் சேர்ந்தவர் சேகர்(25). அவரது சித்தப்பா கோவிந்தப்பா(38). கோவிந்தப்பா தனது தாயிடம் தவறாக நடக்கிறாரோ என்ற சந்தேகத்தில் இருந்தார் சேகர். இந்நிலையில் அதே பகுதியில் உள்ள தோப்பில் நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு சேகர் தனது சித்தப்பாவுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது தான் வைத்திருந்த பையில் இருந்து அரிவாளை எடுத்து கோவிந்தப்பாவின் தலையை வெட்டி எடுத்தார் சேகர். பின்னர் அந்த தலையை ஒரு பெட்டிக்குள் போட்டு அங்கிருந்து லாரி மூலம் பெங்களூரில் உள்ள கே.ஆர். புரத்திற்கு சென்றுள்ளார். அங்கிருந்து ஒரு டாக்சி பிடித்து நேற்று அதிகாலை 2.30 மணிக்கு பெங்களூர் பரப்பன அக்ரஹாரம் சிறைக்கு சென்றுள்ளார்.
அங்குள்ள போலீசாரிடம், என் சித்தப்பாவின் தலையை வெட்டி இந்த பெட்டிக்குள் போட்டு கொண்டு வந்துள்ளேன் என்று கூறி சரண் அடைந்துள்ளார். முதலில் இதை நம்பாத போலீசார் சேகர் தலையை கையில் எடுத்து காட்டியதும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் சேகரை கைது செய்து கோலார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications