கருணாநிதியின் தத்துப்பிள்ளை, கனிமொழியின் தம்பி மு.க. மணி எங்கே?: பரிதி இளம்வழுதி கேள்வி
அதிமுக அரசின் 2 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. அமைச்சர் வளர்மதி தலைமையில் நடந்த கூட்டத்தில் முன்னாள் திமுக அமைச்சரும் தற்போதைய அதிமுக செயற்குழு உறுப்பினருமான பரிதி இளம்வழுதி கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
அவர் பேசியதாவது,
திமுகவில் இருப்பதோ கும்பல். ஆனால் அதிமுகவில் இருப்பதோ கூட்டம். கும்பல் கூடி கலைந்துவிடும். கூட்டமோ நிலையாக நிற்கும். நானும் உங்களுடன் நிலையாக நிற்பேன்.
தமிழக அரசியலில் குழப்பம் ஏற்படும் தேர்தலில் தான் திமுக எளிதில் வெற்றி பெறும். ஆரோக்கியமாக தேர்தல் நடந்தால் திமுக வெற்றி பெறாது. 30 ஆண்டுகளாக திமுகவுக்காக உழைத்தேன். நான் அப்படி என்ன தவறு செய்துவிட்டேன். 1991-96ம் ஆண்டு சட்டசபையில் தனி எம்.எல்.ஏ.வாக செயல்பட்டேன். நான் மட்டும் அப்போது அதிமுகவில் இணைந்திருந்தால் உதயசூரியன் சின்னம் முடங்கியிருக்கும், கறுப்பு சிவப்பு கொடியும் கிடைத்திருக்காது.
இலங்கையைச் சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவனை கருணாநிதி தத்து எடுத்தார். கனிமொழிக்கு தம்பி இல்லாத குறையை போக்க மணி என்ற சிறுவனை தத்தெடுப்பதாக கருணாநிதி அறிவித்தார். மேலும் அந்த சிறுவனை மு.க. என்ற தனது இனிஷியலையும் போட வைத்தார். அந்த சிறுவன் திடீர் என்று காணாமல் போய்விட்டான். அவனை தேடிப்பிடித்து அழைத்து வந்தனர். ஆனால் மீண்டும் காணாமல் போய்விட்டான்.
இதை ஒரு கட்சிக்காரனாக இல்லை தமிழனாக கேட்கிறேன். அந்த சிறுவனை போலீசார் தான் கண்டுபிடிக்க வேண்டும். மேலும் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்றார்.