ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மீதான புகார்: ஆகஸ்ட் 1ம் தேதி விசாரணை!
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிங்வி, ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. ஏர்செல்,மேக்சிஸ் வழக்கு விசாரணையின் போது சிபிஐ தரப்பில், தயாநிதி மாறன் உள்ளிட்டோரிடம் விசாரணை முடிவடைந்துவிட்டது என்று கூறப்பட்டது.
அப்போது ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, 2005-ம் ஆண்டு ஏர்செல் நிறுவனத்தின் 74% பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் வாங்கியது. பின்னர் அதே நிறுவனமே இதர பங்குகளையும் கொஞ்சம் கொஞ்சமாக வாங்கியது. இது இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகளை வாங்க வகை செய்யும் சட்டவிதிகளுக்கு முரணானது. முறைகேடாது. இதை அனுமதித்தது நிதி அமைச்சர் ப.சிதம்பரம்தான் என்று புகார் தெரிவித்திருந்தேன். அதுபற்றிய விசாரணை என்னாயிற்று என்றும் கேள்வி எழுப்பினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் ஏர்செல்-மேக்ஸிஸ் விவகாரத்தில் தயாநிதிமாறன் உள்ளிட்டோர் மீதான வழக்கு விசாரணை தொடர்பாக ஆகஸ்ட் 1-ந் தேதி வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அன்றைய தினம் சிபிஐ தரப்பு என்ன சொல்கிறது என்று பார்த்துவிட்டு அன்று விசாரணையை நடத்தலாம் என்று கூறினர்.
இதே ஏர்செல்- மேக்சிஸ் விவகாரத்தில் முன்பு ப.சிதம்பரம் மீது புகார் கூறப்பட்ட போது பார்லிமென்ட்டில் பேசிய சிதம்பரம், நெஞ்சில் குத்துங்க.. நேர்மையை சந்தேகிக்காதீர்கள் என்று உருக்கமாக பேசியிருந்தார். அப்போது எந்த ஒரு தொலைத் தொடர்பு நிறுவனத்திலும் எனக்கோ என் குடும்பத்தினருக்கோ எந்த ஒரு பங்கும் இல்லை என்றும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.