சங்கரன்கோவில்: தகவல் தராத அதிகாரிக்கு ரூ.18000 அபராதம்
நெல்லை: பத்திரம் தொடர்பான கேள்விக்கு தகவல் தராத வணிகவரித்துறை அதிகாரிக்கு ரூ.18,000 அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழ்நாட்டில் தகவல் உரிமை சட்டம் 2005 ஆம் ஆண்டு முதல் அமுலில் உள்ளது. இத்திட்டத்தின்படி யாரும் அரசு துறை அலுவலகங்களில் இருந்து தேவையான தகவலை கேட்டு பெறலாம். இவற்றுக்கு 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட துறை அலுவலர் கட்டாயமாக பதில் அளிக்க வேண்டும்.
கழுகுமலையை சேர்ந்தவர் நாகூர் முகைதீன். கெமிக்கல் நிறுவன உரிமையாளர். இவர் கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி சங்கரன்கோவில் வணிக வரித் துறை பொது தகவல் அலுவலருக்கு வணிக வரித் துறையில் பாதுகாப்பு பத்திரம் தொடர்பான விபரங்கள் கேட்டுகோரிக்கை மனு அளித்தார். ஆனால் 30 நாட்கள் ஆகியும் குறிப்பிட்ட காலத்திற்குள் எந்தவித பதிலையும் வணிக வரித் துறையினர் அளிக்கவில்லை.
இதனையடுத்து நெல்லை நுகர்வோர் கோர்ட்டில் மன உளைச்சலுக்கு 50 ஆயிரம் ரூபாயும், வழக்கு செலவு மற்றும் தகவலையும் கோரி நாகூர் முகைதீன் வழக்கு தொடர்ந்தார். இதனை நீதிபதி ராமச்சந்திரன், உறுப்பினர்கள் ஜெசிந்தா, பாலசுப்பிரமணியன் ஆகியோர் விசாரித்து மனுதாரரின் மன உளைச்சலுக்கு 15 ஆயிரம் ரூபாயும், வழக்கு செலவு தொகை 3 ஆயிரம் ரூபாய் சேர்த்து 18 ஆயிரம் ரூபாயை 60 நாட்களுக்குள் வழங்க பொது தகவல் அலுவலருக்கு உத்தரவிட்டனர்.