கிரிமினல் கேஸ் ரேட்டிங் ’வரிசை’: தனியரசு, தங்க தமிழ்ச் செல்வன், ஜெயலலிதா, காமராஜ், ஜெ.குரு!
சென்னை: குற்ற வழக்குகளில் ‘தண்டனை' பெற்றவர்கள் எம்.எல்.ஏ, எம்.பி. பதவியில் நீடிக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பளிக்க ஆடிப் போய் இருக்கின்றனர் ‘மக்கள் பிரதிநிதிகள்'..நம் தமிழகமும் விதி விலக்கா என்ன? தமிழக சட்டசபையில் இருக்கும் எம்.எல்.ஏக்களில் எத்தனை பேர் மீது கிரிமினல் வழக்குகள் இருக்கின்றன? எத்தனை பேர் மீது கடும் குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குகள் நிலுவையில் இருக்கின்றனர்? இந்த லிஸ்டைப் பாருங்கள்..

30% பேர் மீது கிரிமினல் வழக்குகள்
தமிழக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டோரில் 70 பேர் மீது அதாவது 30% பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. இவர்களில் அதிமுகவின் வளர்மதி உள்ளிட்ட 37 பேர் மீது அதாவது 16% பேர் மீது கடுமையான குற்றப் பிரிவுகளின் கீழ் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தனியரசுக்கு ‘தனி’ இடம்
தமிழக சட்டசபையில் இருக்கும் எம்.எல்.ஏக்களில் ஆளும் அதிமுகதான் ‘அதிக' கிரிமினல் வழக்குகளை வாங்கியுள்ளது. இதில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் பரமத்தி வேலூர் உ. தனியரசுதான் நெம்.1. இவர் மீது மொத்தம் 36 கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தங்க தமிழ்ச்செல்வனுக்கு 2வது இடம்
ஆண்டிபட்டி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன் மொத்தம் 17 கிரிமினல் வழக்குகளை வாங்கி 2வது இடத்தைப் "பெற்றுள்ளார்"

மூன்றாவது இடத்தில் இருவர்
தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் நன்னிலம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ ஆர். காமராஜ் ஆகியோர் மீது தலா 10 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

4வது இடம் காடுவெட்டி குருவுக்கு!
பாட்டாளி மக்கள் கட்சியின் ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ காடுவெட்டி குரு மீது மொத்தம் 9 வழக்குகள் நிலுவையில் உள்ளன. பின்னர் கரூர் செந்தில்பாலாஜி, உளுந்தூர்பேட்டை குமரகுரு என தொடரும் பட்டியலில் அடுத்தடுத்து 13வது இடம் வரை அதிமுகவினரே ‘ஆக்கிரமித்திருக்கின்றனர்.

திமுக, தேமுதிகவில் யார்?
திமுகவில் ஆத்தூர் ஐ. பெரியசாமி 4 வழக்குகளுடன் 14வது இடத்தில் (திமுகவில் முதலிடம்!), தேமுதிகவின் திருக்கோயிலூர் வெங்கடேசன் 4 வழக்குகளுடன் 16வது இடத்தில் இருக்கின்றனர்.

கோகுல இந்திரா, வளர்மதி
அதிமுக பெண் எம்.எல்.ஏக்களில் கோகுல இந்திரா 3 வழக்குகளை ‘வாங்கி' 19வது இடத்தில் இருக்கிறார். கடுமையான குற்றப் பிரிவுகளின் கீழ் இடம்பிடித்திருக்கிறார் பி.வளர்மதி

37 பேர் மீது ‘சீரியஸ்’ கிரிமினல் கேஸ்
தமிழக சட்டசபையில் 37 எம்.எல்.ஏக்கள் மீது கடுமையான குற்றப் பிரிவுகளின் கீழான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ராஜா, கனிமொழி:
தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்களில் சிறைவாசன் ‘அனுபவித்தவர்கள்' திமுகவின் ஆ.ராசா, கனிமொழி. ஆனால் அவர்கள் மீதான வழக்கு இன்னமும் நிலுவையில் இருக்கிறது. ‘தண்டனை' விதிக்கப்பட்டால் அவர்களது எம்.பி.பதவியும் பறிபோகும்!












Click it and Unblock the Notifications