மறியல் செய்த இளவரசன் பெற்றோர் கைது- வீட்டில் கொண்டு போய்விடப்பட்டனர்!
தர்மபுரி: 144 தடை உத்தரவை மீறி தர்மபுரி அரசு மருத்துவமனைக்குள் செல்ல முயன்ற இளவரசனின் பெற்றோர் உள்ளிட்ட 30 பேரை போலீசார் கைது செய்து வலுக்கட்டாயமாக வீட்டில் கொண்டு போய்விட்டனர். அவர்கள் வீட்டை விட்டு வெளியேறி போராட்டம் நடத்த முடியாத வகையில் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மர்மமான முறையில் மரணமடைந்த இளவரசனின் உடல் தர்மபுரி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உயர் நீதிமன்றம் உத்தரவுபடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள இளவரசன் உடலை சென்னையில் இருந்து சென்ற டாக்டர்கள் குழு இன்று காலை ஆய்வு பணியை மேற்கொண்டது.
இந்த ஆய்வு பணியின்போது இளவரசனின் பெற்றோர், உறவினர்கள் மருத்துவமனையில் இருந்தனர். பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியே சென்ற பெற்றோர், உறவினர்கள் மீண்டும் திரும்பினர்.
அப்போது, அவர்களை மருத்துவமனைக்குள் அனுமதிக்க காவல்துறையினர் மறுத்துவிட்டனர். 144 தடை உத்தரவு இருப்பதால் கும்பலாக கூடவோ, இருக்கவோ கூடாது என்று காவல்துறையினர் கூறினார்.
ஆனால், காவல்துறையினரின் தடையை மீறி இளவரசனின் தந்தை இளங்கோ, தாயார் கிருஷ்ணவேணி, உறவினர் என 30 பேர் மருத்துவமனைக்குள் செல்ல முயன்றனர். அவர்களை காவல்துறையினர் தடுத்தனர். இதையடுத்து, காவல்துறையினரின் கெடுபிடியை கண்டித்து அனைவரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
பின்னர் அனைவரையும் போலீசார் வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றினர். இளவரசனின் பெற்றோரை அவர்கள் வீட்டில் கொண்டு போய்விட்ட போலீசார் அவர்கள் வெளியே வந்து மீண்டும் போராடத வகையில் பாதுகாப்பும் போட்டுள்ளனர்.