மேட்டூர் அணை நீர்மட்டம் 64 அடியானது... மின் உற்பத்தி அதிகரிப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கடந்த 2 வாரமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக 15 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 64.50 அடியாக உயர்ந்தது.
கடந்த சில நாட்களாக அணைக்கு வரும் தண்ணீரின் அளவு திடீரென அதிகரித்தும், திடீரென குறைந்தும் வருகிறது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரியில் தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.
நேற்று காலை சுமார் 30 ஆயிரம் அடிக்கும் மேல் ஒகேனக்கல்லுக்கு தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அது இன்று காலை 25 ஆயிரம் கனஅடியாக குறைந்து விட்டது. தற்போது அணைக்கு வினாடிக்கு 23 ஆயிரத்து 300 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
காவிரி ஆற்றில் இதுவரை 3 முறை தண்ணீர் அதிகரித்தும், குறைந்தும் வந்திருக்கிறது. தற்போது கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 4 ஆயிரத்து 800 கனஅடி திறக்கப்பட்டு இருக்கிறது. மேலும் தொடர்ந்து மழையும் பெய்து வருவதால் காவிரியில் திறந்து விடப்படும் நீரின் அளவும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மின் உற்பத்தி அதிகரிப்பு
அணை மின் நிலையம் வழியாக திறந்து விடப்படும் தண்ணீரின் மூலம் 28 மெகா வாட் மின்சாரம் தற்போது உற்பத்தியாகி வருகிறது. அணையின் நீர்மட்டம் 30 அடிக்கும் குறைவாக இருக்கும் போது, பூங்காவிற்கு அருகிலுள்ள மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்படும். நீர்மட்டம் 30 அடியை தாண்டும் போது, சுரங்க மின் நிலையம் வழியாக தண்ணீர் வெளியேற்றப்படும். தண்ணீரின் அளவு அதிகமாகும் போது, அழுத்தமும் அதிகமாகி மின் உற்பத்தி உயரும்.
இந்த முறையில், 50 மெகாவாட் வரை மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம். மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாகிக்கொண்டே வருவதால், மின் உற்பத்தியும் அதிகமாக வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தண்ணீரில் மூழ்கிய பயிர்கள்
இதனிடையே மேட்டூர் அணையில் திடீர் என தண்ணீர் உயர்ந்த காரணத்தால் சேலம் மாவட்டத்தின் ஒரு கரையின் பகுதியில் உள்ள பண்ணவாடியில் இருந்து மேச்சேரி, பள்ளிப்பட்டி, மாக்கல்பட்டி வரையும் அதன் எதிர்கரையில் உள்ள தர்மபுரி மாவட்டம் நெருப்பூர் முதல் வெள்ள மண்காடு வரையும் நீர்த்தேக்கப் பகுதியில் பயிர் செய்த பயிர்கள் மூழ்கிவிட்டன.
ஒரு சில இடங்களில் அறுவடை செய்து விட்டனர். பல இடங்களில் தண்ணீரில் மூழ்கி விட்டன. தண்ணீரில் மூழ்கியதால் பல லட்சம் மதிப்பில் விவசாயிகள் நஷ்டம் அடைந்து உள்ளனர்.