கூடங்குளத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு எவ்வளவு மின்சாரம் கிடைக்கும்...?
கூடங்குளம்: கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தமிழகத்திற்கு 462 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மின் உற்பத்திக்கான பணிகள் தொடங்கி விட்டன. இன்னும் சில நாட்களில் மின்சாரம் உற்பத்தியாகத் தொடங்கும்.
அங்கு எப்படி மின்சாரம் உற்பத்தி செய்யப்படும், எவ்வளவு உற்பத்தி செய்யப்படும், தமிழகத்திற்கு எவ்வளவு கிடைக்கும் என்பது குறித்து இந்திய அணு சக்திக் கழகத் தலைவர் ஆர்.கே.சின்ஹா விளக்கியுள்ளார்.
டர்பன் இயங்க 1200 மெகாவாட் வெப்பம் தேவை
கூடங்குளம் அணுஉலை செயல்பட தொடங்கிய போதிலும் மின் உற்பத்தி செய்யும் டர்பன் இயங்குவதற்கு குறைந்தபட்சம் 1200 மெகாவாட் வெப்பம் அணுஉலைக்குள் இருக்கவேண்டும்.
அதற்கு ஒரு மாதமாகும்
இந்த 1200 மெகாவாட் வெப்பம் உருவாக 35முதல் 45நாட்கள் ஆகும்.
அதன் பின்னர் முதலில் 400 மெகாவாட் மின்சாரம்
அதன்பின் அந்த வெப்பஆற்றலை டர்பனில் செலுத்தி, 400 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படும். அந்த மின்சாரம் தென் மண்டல மின்சார கிரிட்டில் இணைக்கப்படும்.
படிப்படியாக உயரும்
இதற்கு அடுத்தபடியாக 500 மெகாவாட், 750 மெகாவாட், 900மெகாவாட், 1000 மெகாவாட் என பல்வேறு நிலைகளாக மின்உற்பத்தி படிப்படியாக உயர்த்தப்படும். இந்த ஒவ்வொரு நிலைகளுக்கு இடையே இடைப்பட்ட காலம் 2 முதல் 3 வாரங்களாகும்.
தமிழகத்திற்கு 462 மெகாவாட் மின்சாரம்
கூடங்குளம் அணுமின் திட்டம் முதல் அணுஉலையின் மூலம் 1000மெகாவாட் மின்சாரத்தை தேசிய மின்வாரியத்தில் இணைக்கப்பட உள்ளது. இதிலிருந்து தமிழகத்திற்கு 462 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் என்றார் அவர்.