ஐ.மு. கூட்டணி அரசில் பெட்ரோல் விலை 120 சதவிகிதம் உயர்வு: வைகோ கண்டனம்

இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
ஒவ்வொரு முறையும் பெட்ரோல் விலை உயர்வுக்குக் கச்சா எண்ணெய் விலையைக் காரணம் காட்டுகிறார்கள். ஆனால், அண்டை நாடுகளிலும், ஆசியா, ஐரோப்பிய நாடுகளிலும் பெட்ரோல் விலை இந்தியாவைக் காட்டிலும் பன்மடங்கு குறைவாகவே உள்ளது.
கடந்த ஒன்றரை மாதத்தில் நான்காவது முறையாக பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.1.95 ஆக உயர்த்தி இருக்கிறது. தற்போதைய விலை உயர்வையும் சேர்த்து, 44 நாட்களில் ரூபாய் 6.52 பெட்ரோல் விலை அதிகரித்திருக்கின்றது. இந்த அரசு 2004 இல் பதவி ஏற்றபோது, பெட்ரோல் விலை ரூபாய் 35.71 ஆக இருந்தது. இப்போது, 73.60 ஆக உள்ளது.
2010 ஜூன் முதல் பெட்ரோல் விலை நிர்ணயம் செய்யும் பொறுப்பை எண்ணெய் நிறுவனங்களிடம் மத்திய அரசு ஒப்படைத்த பின்னர், பெட்ரோல் விலை தாறுமாறாக உயர்த்தப்படுவது வாடிக்கையாகிவிட்டது.
இதனால், எவ்விதக் கட்டுப்பாடுகளும் இன்றி, விலைவாசியும் ஏறிக்கொண்டே போகிறது. மத்திய அரசு விலைவாசி ஏற்றத்தை ஒரு பொருட்டாகக் கருதாமல், தொடர்ந்து அலட்சியப்படுத்திக்கொண்டே இருக்கிறது. நாட்டின் பொருளாதாரத்தைச் சீர்குலைத்து, ரூபாயின் மதிப்பை வீழ்ச்சி அடையச் செய்ததுதான் மன்மோகன் சிங் அரசின் சாதனை ஆகும்.
பெட்ரோல் விலை உயர்வின் காரணமாக விலைவாசி மேலும் கடுமையாக உயரும். குறிப்பாக வறட்சியால் அதிகரித்து வரும் உணவுப் பொருட்கள் விலை மேலும் உயர்ந்து, மக்கள் மீது தாங்க முடியாத சுமை ஏற்றப்படும்.
எனவே மத்திய அரசு பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் பொறுப்பை எண்ணெய் நிறுவனங்களிடம் இருந்து மீண்டும் ஏற்பதுடன், பெட்ரோல் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.












Click it and Unblock the Notifications