'நம்ம ஏர்போர்ட்டா இது..!'- அதிசயிக்க வைக்கும் சென்னை விமான நிலைய பன்னாட்டு முனையம்!
சென்னை: சென்னை விமானநிலையத்தின் பன்னாட்டு முனையம் அதிநவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் சோதனை ஓட்டம் நேற்று வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
அப்போது இதனைப் பயன்படுத்திய பயணிகள் சிறப்பாக இருப்பதாக பாராட்டினர்.
சென்னை விமான நிலையத்தில் உள்ள பன்னாட்டு முனையம் மற்றும் உள்நாட்டு முனையங்கள் சர்வதேச தரத்தில், அதிநவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன.
இந்த முனையங்களை துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி கடந்த ஜனவரி மாதம் 31-ந்தேதி திறந்து வைத்தார். உள்நாட்டு முனையத்தில் கடந்த 3 மாதங்களாக வருகை மற்றும் புறப்பாடு பகுதிகள் முழுமையாக செயல்படத் தொடங்கினாலும், பன்னாட்டு முனையம் மட்டும் முழுமையாக செயல்படாமல் இருந்தது.
இப்போது பணிகள் மற்றும் பணியாளர் நியமனம் போன்ற முழுமையாக முடிந்த நிலையில், புதிய பன்னாட்டு முனையத்தில் நேற்று சோதனை ஓட்டம் நடந்தது.
காலையில், சிங்கப்பூரில் இருந்து வந்த பயணிகளின் பயன்பாட்டுக்கு விமான நிலையம் திறந்து விடப்பட்டது.
அவர்களில் பெரும்பாலானோர் இது நம்ம சென்னை விமான நிலையம்தானா என அதிசயிக்கும் அளவுக்கு மாறிப் போயிருந்தது பன்னாட்டு முனைமம்.
சர்வதேச அளவிற்கு அதிநவீன வசதிகளுடன் இந்தப் புதிய முனையம் உள்ளதாக பலரும் பாராட்டினர். குறிப்பாக குடியுரிமை மற்றும் சுங்க சோதனைகள் விரைவாக முடிந்தது பாராட்டும்படி இருந்தது என்றனர்.
விரைவில் முழுமையான பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது சென்னை விமான நிலையத்தின் அண்ணா பன்னாட்டு முனையம்!