ரஷிய விமான நிலையத்தில் ஸ்னோடெனை முடக்கி வைத்திருக்கிறது யு.எஸ்: புதின் குற்றச்சாட்டு
மாஸ்கோ: ரஷிய விமான நிலையத்திலேயே ஸ்னோடென் முடங்கிக் கிடக்க அமெரிக்காவே காரணம் என்றும் விரைவில் அவர் நாட்டை விட்டு வெளியேறுவார் என்றும் ரஷிய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளை எப்படியெல்லாம் அமெரிக்கா உளவு பார்த்தது என்ற தகவல்களை வெளியிட்டு அதிர வைத்தவர் ஸ்னோடென். இதைத் தொடர்ந்து ஸ்னோடென் மீது தேசத் துரோக வழக்குகளை தொடுத்தது அமெரிக்கா. இதனால் அந்த நாட்டைவிட்டு வெளியேறி முதலில் சீனாவின் ஹாங்காங்கில் இருந்தார். பின்னர் வெளிநாடு ஒன்றுக்கு செல்வதற்காக ரஷியாவின் மாஸ்கோ விமான நிலையம் சென்றார்.
ஆனால் அமெரிக்காவின் வேட்டையும் கெடுபிடியும் அதிகரிக்க கடந்த பல நாட்களாக ஸ்னோடென், ரஷிய விமான நிலையத்திலேயே முடங்கி உள்ளார். அவருக்கு அடைக்கலம் கொடுக்க வெனிசுலா, நிகரகுவா உள்ளிட்ட நாடுகள் முன்வந்துள்ளன.
இந்நிலையில் ஸ்னோடென் பற்றி கருத்து தெரிவித்துள்ள ரஷிய அதிபர் புதின், அவரை நாங்கள் அழைக்கவும் இல்லை. ஸ்னோடென் வெளிநாடு ஒன்று செல்வதற்காக மாஸ்கோ வந்தார். ஆனால் அவரை அங்கிருந்து வெளியேற அமெரிக்காதான் விடவில்லை. இருப்பினும் அவர் விரைவில் ரஷியாவைவிட்டு விரைவில் வெளியேறுவார் என நம்புகிறேன் என்றார்.
புதினிடம் செய்தியாளர்கள் ஸ்னோடென்னின் எதிர்காலம் பற்றி கேட்டதற்கு, எனக்கு எப்படி தெரியும்? அது அவரது எதிர்காலம்,, அவரது வாழ்க்கை என்று மட்டும் கூறியிருந்தார்.
கடந்த மாதம் ஸ்னோடெனுக்கு அடைக்கலம் குறித்து கருத்து தெரிவித்திருந்த புதின், அமெரிக்கா பற்றிய தகவல்களை அம்பலப்படுத்துவதை அவர் நிறுத்தினால் அடைக்கலம் கொடுப்பது பற்றி பரிசீலிப்போம் என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.