முடிந்தது பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம்: டீம் மோடி இன்றல்ல நாளை தான் அறிவிக்கப்படுமாம்
பாஜக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தலைமையில் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கவிருக்கின்றது. இந்நிலையில் பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் இன்று மாலை டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, மூத்த தலைவர்கள் அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ், முன்னாள் தலைவர் நிதின் கட்காரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தனது தலைமையிலான தேர்தல் குழுவை மோடி அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடாமல் கூட்டம் முடிந்தது. இந்நிலையில் மோடியின் தேர்தல் குழு குறித்து நாளை அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. எந்தெந்த தலைவர்களை எந்தெந்த தொகுதிகளுக்கு பொறுப்பாளராக நியமிப்பது குறித்தும் இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யவில்லையாம்.
முன்னதாக இது தொடர்பாக மோடி பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்கை நேற்று இரவு சந்தித்து ஆலோசனை நடத்தினார். தேர்தல் வியூகம் குறித்து விவாதிக்க மோடி ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவதை நாக்பூரில் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய கூட்டத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி துவங்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் எழுப்ப வேண்டிய பிரச்சனைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.