ஜிகு.ஜிகு.ஜிகு.. சென்னையில் சீக்கிரமே ஓட வருது மோனோ ரயில்...!
சென்னை: மோனோ ரயில் திட்டத்தை விரைவுபடுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ரூ. 8500 கோடி முதலீட்டில் இந்த திட்டப் பணிகளை விரைவுபடுத்தி, முடுக்கி விட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருக்கிறாராம்.
லோக்சபா தேர்தலுக்கு முன்பாகவே ஏதாவது ஒரு வழித்தடத்தில் மோனோ ரயிலை இயக்கி விட வேண்டும் என்றும் அவர் தீவிரம் காட்டி வருகிறாராம்.
அதிமுக தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்த திட்டம்தான் இந்த மோனோ ரயில். பட்ஜெட்டிலும் இது அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 3 வழித்தடங்களில்
வண்டலூர் முதல் வேளச்சேரி வரை 23 கிலோமீட்டர் தூரத்திற்கு ஒரு பாதை.. பூந்தமல்லி முதல் கத்திப்பாரா சந்திப்பு வரை 16 கிலோமீட்டர் தூரத்திற்கு 2வது பாதை. மற்றும் பூந்தமல்லி முதல் வட பழனி வரை 18 கிலோமீட்டர் தூரத்திற்கு 3வது பாதை என மொத்தம் 3 வழித்தடங்களை அரசு அடையாளம் கண்டுள்ளது.

நாலு நிமிஷத்திற்கு ஒரு ரயில்
இரு மார்க்கத்திலும் நான்கு நிமிடங்களுக்கு ஒரு ரயில் என்ற வகையில் இந்த மோனோ ரயில்கள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

புறநகர்ப் பகுதிகளுக்கு வரப் பிரசாதம்
மோனோ ரயிலின் முக்கிய நோக்கமே நகருக்குள் நிலவும் போக்குவரத்து நெருக்கடிக்குத் தீர்வு காண்பதுதான் என்பது அரசின் வாதம். குறிப்பாக புறநகர்ப் பகுதி மக்களுக்கு இந்த மோனோ ரயில் பெரும் வரப்பிரசாதமாக அமையும் என்றும் அரசு கருதுகிறது.

லோக்சபா தேர்தலுக்குள்
3 மார்க்கங்களில் லோக்சபா தேர்தலுக்குள்ளாகவே ஒரு மார்க்கத்திலாவது ரயிலை ஓட்டி விட வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா விரும்புகிறாராம்.

ஒரு வருடமாக இழுபறி
ஆனால் திட்டப் பணிகள் கடந்த ஒரு வருடமாகவே இழுபறியாக உள்ளன. குறிப்பாக ஒப்பந்ததாரர்களை முடிவு செய்யும் பணிகள் இன்னும் முடியாமல் உள்ளது.

அவசர கூட்டம்
இந்த நிலையில் மோனோ ரயில் பணிகளை முடுக்கி விட முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. இதையடுத்து தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், தலைமைச் செயலகத்தில் ஒரு அவசரக் கூட்டத்தை கூட்டி அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார். ஒரு மணி நேரம் இக்கூட்டம் நடந்தது.
விரைவில் மோனோ ரயில் திட்டப் பணிகளை தொடங்கி விரைவுபடுத்தும் அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிகிறது.












Click it and Unblock the Notifications