மீத்தேன் வாயு எடுக்க எதிர்ப்பு: திருவாரூர், நாகையில் கடையடைப்பு
தஞ்சாவூர்: மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாகை, திருவாரூர் மாவட்டங்களில் வணிகர்கள் இன்று கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் சுமார் 691 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் உள்ள அரிய வகை நிலக்கரி படிமத்தின் மீது மீத்தேன் வாயு படர்ந்துள்ளது.
தஞ்சை மாவட்டத்தில் திருவிடைமருதூர், கும்பகோணம், ஒரத்தநாடு, பாபநாசம், திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி நீடாமங்கலம், குடவாசல், வலங்கைமான் உள்ளிட்ட 8 தாலுகாகவில் 1 லட்சத்து 66 ஆயிரத்து 210 ஏக்கர் விவசாய நிலப்பரப்பில் படர்ந்து உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதனை வணிக ரீதியாக எடுத்து விற்பனை செய்வதற்காக அரியானா மாநிலத்தை சேர்ந்த கிரேட் ஈஸ்டர் எனர்ஜி என்ற தனியார் நிறுவனத்திற்கு மத்திய அரசு டெண்டர் விட்டது.அதன்படி தொடர்ந்து 25 ஆண்டுகள் மீத்தேன் வாயுவை எடுக்க அந்த நிறுவனத்திற்கு உரிமை உள்ளது.
பூமிக்கு அடியில் சுமார் 1,500 அடியிலிருந்து 2 ஆயிரம் அடி வரை ஆழத்தில் உள்ள நிலக்கரி படிமம் வரை துளையிட்டு அதன் இடுக்குகளில் உள்ள தண்ணீரை வெளியேற்றினால் தான் நிலக்கரி படிமத்தின் மீது படர்ந்துள்ள மீத்தேன் வாயுவானது வெளிப்படும். இதற்காக முதல் கட்டமாக 50 இடங்களில் ஆழ்துளை கிணறு அமைப்பது. அதன் வணிக பயன்பாட்டை பொறுத்து ஆழ்துளை கிணறுகளை அதிகப்படுத்துவது என்ற வகையில் அந்த நிறுவனம் திட்டத்தை செயல்படுத்துவதாக அறிவித்தது.

விவசாயிகள் அச்சம்
மீத்தேன் வாயுவை எடுக்கும் போது வெளிப்படும் நீர் அதிக உப்பும், காரத்தன்மையும் உள்ள கடின நீராகும். இது பூமியின் மேல் பகுதியில் படர்ந்து மண்ணின் விளைச்சல் தன்மையை பாதிக்கும் எனவும், குடிநீராக பயன்படுத்தப்பட்டு வரும் நிலத்தடி நீர்மட்டத்தையும் பாதிக்கும் எனவும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர்.

விவசாயம் பாதிக்கும்
தஞ்சை, திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை விவசாய தொழில் தான் அடிப்படையானது. அதில் 1000 எக்டேர் விவசாய நிலங்கள் இந்த திட்டத்தால் தண்ணீர் இன்றி பாதிக்கப்படும். குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படும்.
இதனால் பல்வேறு அமைப்புகளும், அரசியல் கட்சியினரும் மீத்தேன் வாயு எடுப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பல்வேறு விதமான போராட்டங்களை விவசாயிகள் செய்து வருகின்றனர்.

தமிழக அரசு தடை
இந்நிலையில் தமிழக அரசு இந்த திட்டத்தை நிறைவேற்ற தற்காலிக தடை விதித்து உள்ளது. மேலும், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மற்றும் வல்லுனர்கள் அடங்கிய குழு ஒன்றை ஏற்படுத்தி இத்திட்டம் குறித்து முழுமையான ஆய்வை நடத்த முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டு உள்ளார்.

வணிகர்கள் கடையடைப்பு
இந்நிலையில் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்தை உடனே கைவிட வேண்டும். இந்த திட்டம் நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்கள், விவசாய சங்க பிரதிநிதிகள், இயற்கை வேளாண் விஞ்ஞானிகள் தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டத்தில் இன்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications