தெலுங்கானா.. இறுதி முடிவெடுக்க ஜூலை 31ம் தேதி கூடுகிறது ஐ.மு. கூ. ஒருங்கிணைப்புக் குழு

தெலுங்கானா விவகாரம் மிகப் பெரிய தலைவலியாகியுள்ளது காங்கிரஸுக்கு. புதிய மாநிலம் அமைக்க ஆந்திர மாநில காங்கிரஸுக்குள்ளேயே பெரும் எதிர்ப்பு காணப்படுகிறது. அதேசமயம், புதிய மாநிலத்தை அமைக்காவிட்டால் தெலுங்கானா பகுதியில் வரும் லோக்சபா தேர்தலில் ஒரு இடத்தில் கூட காங்கிரஸால் வெல்ல முடியாத நிலை ஏற்படும்.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்த இறுதி முடிவை எடுக்க ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுவின் கூட்டத்தை காங்கிரஸ் கூட்டியுள்ளது. ஜூலை 31ம் தேதி புதன்கிழமையன்று இக்கூட்டம் நடைபெறவுள்ளது.
மேலும் காங்கிரஸ் காரியக் கமிட்டி கூட்டமும் இதுகுறித்து விவாதிக்கவுள்ளது.
தெலுங்கானாவை அமைக்கக் கூடாது என்று கோரி காங்கிரஸில் தற்போது புயல் கிளம்பியுள்ளது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த தெலுங்கான எதிர்ப்பு காங்கிரஸ் எம்.பிக்களான மத்திய அமைச்சர்கள் பல்லம் ராஜு, கே.எஸ்.ராவ், சிரஞ்சீவி, புரந்தரேஸ்வரி, பாபிராஜு, அனந்தராமி ரெட்டி ஆகியோர் பிரதமரைச் சந்தித்து ஆந்திராவைப் பிரிக்கக் கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
ஆந்திரா பிளவுபட்டால் அது ஆந்திராவில் மட்டுமல்ல, நாடு முழுவதும் பெரும் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றும் அவர்கள் பிரதமரிடம் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications