பணிபுரியும் இடத்தில் பாலியல் தொல்லை கொடுத்தால் டிஸ்மிஸ்: புதிய சட்டம் விரைவில் அமல்
டெல்லி: பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பவர்களை பணி நீக்கம் செய்யும் சட்டம் வரும் பிப்ரவரி மாதம் அமலுக்கு வரும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கான விதிமுறைகளைக் கொண்ட வரைவு மசோதாவை, மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை தயாரித்து வருகிறது.
வேலை செய்யும் இடங்களில் பெண்களுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த புகார் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளி பணி நீக்கம் செய்வது, பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வை நிறுத்தி வைப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான இழப்பீடு வழங்குவது போன்ற விதிமுறைகள் இடம் பெற்றுள்ளன.

அதில் இடம் பெற்றுள்ள மற்ற முக்கிய அம்சங்கள் வருமாறு-
புகார் விசாரிக்க குழு
இது போன்ற புகார்களை விசாரிப்பதற்காக அமைக்கப்படும் உள்ளூர் கமிட்டியில், தொழிலாளர், வேலைவாய்ப்பு, சிவில் அல்லது கிரிமினல் சட்ட விதிகளில் 5 ஆண்டுகள் அனுபவம் உள்ள சமூக சேவகர் ஒருவர் இடம் பெற வேண்டும்.
மாவட்ட அளவில்
மாவட்ட அளவில் குழந்தைகள் பாதுகாப்பு சங்கம் ஒன்றை அமைக்க வேண்டும். அல்லது மாவட்ட அளவிலான பெண்கள் துயர் துடைக்கும் அமைப்பு ஒன்று, விசாரணை கமிட்டிக்கு தேவையான உதவிகளை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
நேருக்கு நேர் விசாரணை இல்லை
விசாரணையின்போது எந்த ஒரு கட்டத்திலும் இரு தரப்பிலும் சட்ட பிரதிநிதிகள் யாரும் ஆஜராக அனுமதி இல்லை. புகார் கொடுத்தவரையும், குற்றம் சாட்டப்பட்டவரையும் நேருக்கு நேர் வைத்து விசாரணை எதுவும் நடத்தக்கூடாது என்பன போன்ற விதிமுறைகள் அதில் இடம் பெற்றுள்ளன.
பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு
பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட நபரை பணி நீக்கம் செய்வது, பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வை நிறுத்தி வைப்பது, பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்குவது உள்ளிட்ட விதிமுறைகள் மசோதாவில் இடம் பெற்றுள்ளன.
பொய்யான குற்றச்சாட்டு
அதே நேரத்தில் பொய்யான குற்றச்சாட்டு என தெரிய வந்தால் புகார் அளித்த பெண் மீதும் பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்ககைகள் எடுக்கப்படும்.
பிப்ரவரியில் அமல்
வருகிற பிப்ரவரி மாதத்தில் இந்த புதிய சட்டம் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications