விசாகப்பட்டனத்தைப் பின்னுக்குத் தள்ளி ஆந்திராவின் புதிய தலைநகராகுமா விஜயவாடா?
விஜயவாடா: ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகராக விஜயவாடா எழுச்சி பெறுமா என்ற புதிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தெலுங்கானா பிரிவினையால் ஹைதராபாத் 10 ஆண்டுகளுக்குப் பின்னர் தெலுங்கானாவுக்குச் சொந்தமானதாக மாறி விடும் என்பதால், அதன் பின்னர் புதிய தலைநகரை தேடும் நிலையில், ஆந்திரா உள்ளது.
எனவே 10 வருடங்களுக்குப் பிறகு விஜயவாடா, ஆந்திராவின் புதிய தலைநகராக அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

3வது பெரிய நகரம்
ஒருங்கிணைந்த ஆந்திராவின் 3வது பெரிய நகரம் விஜயவாடா. ஹைதராபாத், விசாகப்பட்டனத்துக்குப் பிறகு பெரிய, முக்கிய நகராக விஜயவாடா விளங்குகிறது.

வளமையான நகரம்
விஜயவாடா மிகவும் வளமையான, செழுமையான ஒரு நகரம் ஆகும். ஆயிரக்கணக்கான என்.ஆர்.ஐக்களின் சொந்த ஊராகவும் இது திகழ்கிறது. கல்வியில் சிறந்து விளங்குகிறது. ஆட்டோமொபைல் துறையிலும் முன்னணியில் உள்ளது. ஏராளமான கார் நிறுவனங்களும் இங்கு உள்ளன.

திரைத்துறையினரும் அதிகம்
மேலும், தெலுங்குத் திரையுலகுடனும் இது நெருங்கிய தொடர்பு கொணட்தாகும். ஏராளமான திரைப்படக் கலைஞர்களுக்கு இது சொந்த ஊராகும். இங்கு திரைப்படத் தயாரிப்பு, விநியோகம் ஆகியவையும் நடைபெறுகிறது.

அருமையான அடிப்படைக் கட்டமைப்பு
அருமையான அடிப்படைக் கட்டமைப்பையும் கொண்டது விஜயவாடா. சாலை வசதி, ரயில் வசதி என சிறப்புற விளங்குகிறது. மேலும் மிகப் பெரிய வர்தத்க மையமாகவும் அது திகழ்கிறது.

வெற்றியின் நிலம்
விஜயவாடா என்றால் தெலுங்கில் வெற்றியின் பூமி என்று பொருளாம். ஆனால் தெலுங்கானாவை இழந்த வருத்தம் விஜயவாடா மக்களுக்கு நிறையவே உள்ளது.

துண்டு துண்டாகி விட்டோமே....!
ஐக்கிய ஆந்திராவை வலியுறுத்தி விஜயவாடாவில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. போராட்டக்காரர் ஒருவர் கூறுகையில், நாங்கள் ஒருங்கிணைந்த ஆந்திராவையே விரும்புகிறோம். ஆனால் இப்போது துண்டு துண்டாகப் போகிறோம் என்பது வருத்தம் தருகிறது என்றார்.

விசாகப்பட்டனம் தலைநகராகாது?
அதேசமயம், 2வது பெரிய நகரான விசாகப்பட்டனம் தலைநகராகும் வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது. விஜயவாடா அளவுக்கு இது பன்முக நகராக இல்லை என்பதே இதன் குறையாகும்.












Click it and Unblock the Notifications