பெருகிவரும் போலி மருத்துவர்கள்... ஆய்வில் அதிர்ச்சித் தகவல்
டெல்லி: எம்.பி.பி.எஸ் படிக்காமலேயே டாக்டர் என்ற பட்டத்தை போட்டுக் கொண்டு அலோபதி மருத்துவம் பார்ப்பவர்கள் இந்தியாவின் நகர்ப்புறங்களில் அதிகரித்து வருவதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது.
'ஐ.எம்.எஸ். ஹெல்த்' என்ற அமைப்பு இந்தியாவின் பெருநகரம் எனப்படும் மெட்ரோ மற்றும் மெட்ரோ அல்லாத 120 நகரங்களில் இந்த ஆய்வை நடத்தி உள்ளது.
தற்போதுள்ள டாக்டர்களில் உண்மையாகவே எம்.பி.பி.எஸ் படித்தவர்கள் யார் என்பது பற்றியும், சித்தா, யுனானி படித்தவர்கள் அலோபதி மருத்துவம் பார்ப்பது பற்றியும், 10 வது, ப்ளஸ் டூ வரை படித்தவர்கள் கம்பவுண்டர் வேலை பார்த்துவிட்டு தனியாக கிளினீக் தொடங்கியுள்ளது உள்ளிட்ட பல்வேறு சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்துள்ளன.
4 லட்சம் டாக்டர்கள்
மாநகரம், நகரம் உட்பட மொத்தம் 120 நகரங்களில் 4 லட்சம் மருத்துவர்கள் பணிபுரிகிறார்கள். ஆனால் தரமான மருத்துவர்கள் இருக்கிறார்களா என்றால் இல்லை என்றே சொல்லலாம். இந்தச் சூழல் கிராமங்களிலும் நிலவி வருகிறது எனவும் அந்த ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
எம்.பி.பி.எஸ் படிக்கவில்லை
நகர்ப்புறங்களில் பொதுமருத்துவர் என்று பெயர் போட்டுக்கொள்ளும் மருத்துவர்களில் பெரும்பான்மையானோர் முறையாக எம்.பி.பி.எஸ். படிக்காமல் ஆயுர்வேதா, ஹோமியோபதி என்று ஏதாவது ஒன்றில் ஒரு பட்டத்தை வாங்கி வைத்துக் கொண்டு ஆங்கில மருத்துவம் எனப்படும் அலோபதி மருத்துவத்தில் இறங்கி விடுகின்றனர்.
எதுவுமே தெரியலையே
அதேபோன்று கண், காது, மூக்கு என்று சிறப்பு மருத்துவம் படித்தவர்களும் பொது மருத்துவர் என்று சொல்லிக்கொண்டு இறங்குகின்றனர். இவர்களுக்கு நவீன மருத்துவம், அது சார்ந்த கருவிகள் பற்றி எதுவும் தெரிவதில்லை.
பீஸ் கம்மியா இருக்கே
கிளினிக்குக்கு வரும் நோயாளிகளுக்கு எல்லாவிதமான நோய்களுக்கும் ஆலோசனை வழங்குகிறார்கள். பீஸ் குறைவாக உள்ளதே என்று இதுபோன்ற கிளீனிக்குகள் உள்ள அவர்களிடம் போய்விடுகிறார்கள் என்கிறது அந்த ஆய்வு.
நிபுணர்களை தவிர்க்கின்றனர்
பொது மருத்துவம் பார்க்கிறவர்கள் நரம்பு மற்றும் பிற துறைகளில் உள்ள நிபுணர்களை விட குறைவான தொகையையே வாங்குகிறார்கள் என்பதும் மக்கள் இவர்களிடம் அதிகமாக செல்வதற்கு ஒரு காரணமாக உள்ளது.
4லட்சம் பேர்
10 லட்சம் டாக்டர்களில் 4 லட்சம் டாக்டர்கள் யுனானி, ஆயுர்வேதம், சித்தா என இந்திய மருத்துவம் பயின்றவர்கள். ஆனால் அவர்களும் மருத்துவர்கள் என்றே சொல்லிக் கொள்கிறார்கள்.
போலி டாக்டர்களா?
''அரசு இதுபோன்ற போலி டாக்டர்களை தடுக்க கடுமையான சட்டங்களை கொண்டு வரவேண்டும். நகரம், கிராமங்கள் என எல்லா இடங்களிலும் இதுபோன்ற மருத்துவர்கள் இருந்து வருகிறார்கள் என்கிறார் இந்திய மருத்துவ சங்கத்தை சேர்ந்த மருத்துவர் ஒருவர்
3 விதமான டாக்டர்கள்
போலி மருத்துவர்கள் மூன்று விதங்களில் செயல்படுகிறார்கள். ஒன்று, மருத்துவம் படிக்காதவர்கள், இரண்டாவது இந்திய மருத்துவம் ஏதாவது ஒன்றை படித்துவிட்டு ஆங்கில மருத்துவம் பார்ப்பது. மூன்றாவது பயிற்சியாளர்கள். இவர்கள் மாற்று மருத்துவம், வளரும் மருத்துவம் என்ற பெயரில் மருத்துவம் பார்க்கிறார்கள்.
சட்டத்தின் பிடியில்
இந்திய மருத்துவ சங்கம், மருத்துவம் படிக்காதவர்கள் மருத்துவம் பார்ப்பதை தடுக்கவும், உரிமம் பெறாமல் கிளினிக் நடத்துவதை தடைச் செய்யவும் வேண்டும்' என்றும் சொல்கிறது. எனவே இவர்களை எல்லாம் சட்டத்தின் கீழ் கொண்டு வரவேண்டும். பயிற்சி மருத்துவர்கள் என்பவர்கள் முறையாக எம்.பி.பி.எஸ். படித்து இந்திய மருத்துவ கவுன்சில் அல்லது மாநில மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உங்க டாக்டர் எப்படி?
இந்த சர்வே அதிர்ச்சியளிக்கக் கூடிய ஒன்றுதான். அடுத்தமுறை நீங்க டாக்டர்கிட்ட போறப்ப அவர் எம்.பி.பி.எஸ் படிச்சவரா என்று செக் பண்ணிக்கங்களேன்.