மேட்டூர் அணை 121 அடி: பொங்கி வரும் காவிரி... சாலைகள் துண்டிப்பு
மேட்டூர்: தொடர் மழை காரணமாக மேட்டூர் அணை நிரம்பி வழிகிறது. அணையின் நீர்மட்டம் 121.1 அடியாக உயர்ந்துள்ளது.
நேற்று அணைக்கு விநாடிக்கு ஒரு லட்சத்து 40 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று ஒரு லட்சத்து 13 ஆயிரம் கன அடியாக நீர் வரத்து குறைந்துள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி இருந்து விநாடிக்கு ஒரு லட்சத்து 22 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்படுகிறது.
கர்நாடகாவில் கன மழை நீடிப்பதால் கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் நிரம்பி வழிந்தது. இதனால் அந்த அணைகளில் இருந்து 1.5லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

ஒகேனக்கல் வெள்ளம்
காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிவரும் வெள்ளம் ஒகேனக்கல்லில் அருவியாக கொட்டுகிறது. இதனால் பாறைகள் தெரியாத அளவிற்கு வெள்ளக்காடானது.

சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டாலும் பொங்கி வரும் காவிரியைப் பார்த்து மகிழ்ச்சியடைந்தனர் சுற்றுலா பயணிகள். தொங்குபாலத்தை தாண்டி செல்கிறது தண்ணீர் இதனால் பயணிகள் செல்லவும், பரிசல் போக்குவரத்திற்கான தடையும் தொடர்ந்து நீடிக்கிறது.

கடலாக காட்சி தரும் அணை
ஒரு லட்சத்திற்கும் அதிகமான கன அடி நீர் மேட்டூர் அணைக்கு வருவதால் அணையின் நீர்மட்டம் தற்போது 121 அடியாக உள்ளது. இதனால் மேட்டூர் அணை கடல் போல காட்சி தருகிறது. அணையின் 16 கண் மதகு வழியாக இன்று 1 லட்சத்து 38 ஆயிரத்து 500 கனஅடி வெளியேற்றப்படுகிறது.

சாலை துண்டிப்பு
மேட்டூர் நீர்மின் நிலையம் மற்றும் 16 கண் பாலம் மதகு வழியாக உபரிநீர் வெளியேற்றப்படுவதால் காவிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் நேற்று மேட்டூர்-எடப்பாடி இடையே சாலை துண்டிக்கப்பட்டது.

நீரில் மூழ்கிய வீடுகள்
அனல் மின் நிலையம் அருகே காவிரி கரையோரம் விவசாய பயிர்கள், தென்னை மரங்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளது. காவிரி கரையோரம் விவசாயிக்கு சொந்தமான குடிசை வீடும் தண்ணீரில் மூழ்கியது. இந்த வீடுகளில் உள்ளவர்கள் முன்பே வெளியேற்றப்பட்டதால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் எற்படவில்லை.

குறைய வாய்ப்பு
கர்நாடகத்தில் மழையின் தீவிரம் குறைந்ததால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பும் குறைக்கப்பட்டது. இதனால் தற்போது மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தும் குறைய தொடங்கி உள்ளது. இதனால் அணையில் இருந்து திறக்கப்படும் நீர் திறப்பும் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

124 அடி தேக்கலாம்
மேட்டூர் அணையின் கொள்ளளவு 120 அடி என்றாலும், 124 அடி வரை அணையில் தேக்கலாம். கடந்த 2005ம் ஆண்டு அணை நீர்மட்டம் 121 அடியை தொட்டது. மேலும் கடந்த 1961ம் ஆண்டு அதிக அளவாக மேட்டூர் அணையில் 124 அடி வரை நீர் சேமித்து வைக்கப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications