தூத்துக்குடியில் நகை அடகு நிறுவனத்தை உடைத்து 135 பவுன் நகை கொள்ளை
தூத்துக்குடி: தூத்துக்குடியில், நகை அடகு நிறுவனத்தை உடைத்து 135 பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றனர். இந்நிறுவனத்திற்கு அருகில் இருந்த இரு வீடுகளிலும் கொள்ளை முயற்சி நடந்துள்ளது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி பால்பாண்டி நகரை சேர்ந்தவர் திருமணி. இவர் தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள ஜெயராஜ் சாலையில் அபி அசோசியேட்ஸ் என்ற பெயரில் தங்க நகை அடகு நிறுவனம் நடத்தி வருகிறார். இவர் வழக்கம்போல் நேற்று இரவு அலுவலகத்தை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார்.
இன்று காலை அலுவலகத்தை திறக்கவந்த திருமணி அலுவலகத்தின் இரும்பு கிரில் கேட் உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அலுவலகத்தின் உள்ளே இருந்த சுமார் 135 பவுன் தங்கநகை கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
தகவல்அறிந்த தூத்துக்குடி டவுண் டி.எஸ்.பி பெஸ்கி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். சம்பவஇடத்திற்கு மோப்பநாய்களும் வரவழைக்கப்பட்டு சோதனை நடத்தப்பட்டது. கொள்ளை குறித்து மத்தியபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை சம்பவம் நடந்துள்ள இடத்திற்கு அருகேயுள்ள இருவீடுகளிலும் கொள்ளையர்கள் கொள்ளை அடிக்க முயன்றுள்ளனர். தூத்துக்குடி மாநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கொள்ளை சம்பவங்கள் அரங்கேறி வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.