பீகார்: மதிய உணவில் பல்லி… சாப்பிட்ட குழந்தைகள் வாந்தி மயக்கம்
பாட்னா: பீகாரில் பல்லி விழுந்த மதிய உணவை சாப்பிட்ட மாணவர்கள் வாந்தி எடுத்து மயங்கி விழுந்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
சரண் மாவட்டத்தில் ஜுலை 16ம் தேதி நஞ்சு கலந்த உணவை சாப்பிட்ட பள்ளிகுழந்தைகள் 23பேர் உயிரிழந்த நிலையில், மீண்டும் மதிய உணவில் சமைப்பதில் அலட்சியம் நிலவுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
வைசாலி மாவட்டத்தின் ஹாஜ்ஜிபூர் அருகே நேற்று மீண்டும் ஒரு சோக நிகழ்ந்துள்ளது. மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த சில மாணவர்கள் வாந்தி எடுத்தனர். இதைக் கண்ட ஆசிரியர்கள், அவர்களை உடனடியாக ஹாஜ்ஜிபூர் அரசு மருத்துமணைக்கு அழைத்துச்சென்றனர். உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டதால் மாணவர்களுக்கு எந்தவித ஆபத்தின்றி தப்பினர்.
இதுகுறித்து விளக்கம் அளித்த பள்ளித்தலைமை ஆசிரியர் 'மாணவர்களுக்கு உணவு வழங்கப்பட்டபோது, பல்லி விழுந்தது தெரிந்ததும், மாணவர்களுக்கு உடனடியாக உணவு வழங்குவது நிறுத்தப்பட்டு, மாணவர்களை மருத்துமனையில் சேர்த்துவிட்டதாக' தெரிவித்தார்.
மதிய உணவு சாப்பிட்ட மாணவர்கள் வாந்தி எடுத்து மயங்கி விழுந்ததை அறிந்த பெற்றோர்கள் பெரும் பீதியடைந்தனர். அலட்சியமாக உணவு சமைத்த சத்துணவு பொருப்பாளர்களை அவர்கள் குற்றம் சாட்டினர்.