எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க விவகாரம்: சட்டத்திருத்தம் கொண்டுவருகிறது மத்திய அரசு
குற்ற வழக்குகளில் மக்கள் பிரதிநிதிகளான எம்.எல்.ஏ, எம்.பி.களுக்கு தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படுவதில் இருந்து பாதுகாப்பு அளிக்கும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் சரத்தை உச்சநீதிமன்றம் ஜூலை 10- தேதி அளித்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பில் ரத்து செய்தது. அதாவது தண்டனை விதிக்கப்பட்ட எம்.பி., எம்.எல்.ஏ., எம்.எல்.சி.க்கள் அதே நாளில் தகுதிநீக்கம் செய்யப்படுவார்கள் என்பதையும் நீதிபதிகள் தெளிவுபடுத்தி இருந்தனர்.
எனினும் இத்தீர்ப்புக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இதன் மூலம் தங்களுக்குப் பிடிக்காத நபர்களை தேர்தலில் போட்டியிட முடியாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் இத்தீர்ப்பை முறைகேடாகப் பயன்படுத்தலாம் என்று எதிர்க்கட்சிகள் அச்சம் தெரிவித்தன.
இதனிடையே இத்தீர்ப்பை அமல்படுத்தும் நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் எடுத்து வருகிறது. ஆனால் இத்தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரும் மனுவை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளது.
அதே நேரம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்கம் தொடர்பாக அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவது குறித்தும் மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
அரசியல் கட்சிகளின் ஆதரவு கிடைத்தால் இதற்காக நாடாளுமன்றத்தில் சட்டத்திருத்த மசோதா கொண்டுவரவும் அரசு திட்டமிட்டுள்ளது.